ஏடிஎம் கொள்ளையில் திருப்பம்: துப்பாக்கியைக் காட்டி எஸ்கேப்பான கொள்ளையர்கள் – சினிமா பாணியில் நடந்த சம்பவம்
Kancheepuram ATM Robbery Case : ஸ்ரீபெரும்புதூர் அருகே ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.9 லட்சம் கொள்ளையடித்த சம்பவத்தில் முக்கிய திருப்பமாக தெலங்கானா மாநிலத்தில் டோல்கேட்டில் போலீஸிடம் துப்பாக்கியைக் காட்டி கொள்ளையர்கள் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சோமங்கலம் அருகே தனியார் வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தை வெல்டிங் மிஷினால் உடைத்து ரூ.9 லட்சத்தை மர்ம நபர்கள் கொல்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எச்சரிக்கை அலராத்தை செயலிழக்க செய்த அவர்கள், சிசிடிவி கேமராவில் ஸ்பிரே அடித்து தங்கள் அடையாளம் தெரியாதவாறு பார்த்துக்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கில் முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
காவல்துறையினரின் விசாரணையில் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் பணத்துடன் கருப்பு நிற காரில் தப்பி சென்றது தெரியவந்துள்ளது. மேலும் தங்கள் காரின் நம்பர் பிளேட்டை மாற்றி, வேறு காரை தங்களது காரில் பொருத்திய பின் தப்பி சென்றதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் தெலங்கானா மாநில சுங்கச்சாவடியில் அந்த காரை கண்டுபிடித்த போலீசாரிடம் கண் இமைக்கும் நேரத்தில் துப்பாக்கியைக் காட்டி தப்பி சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து தப்பி அருகில் உள்ள காட்டுப்பகுதியில் காரை நிறுத்திவிட்டு சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க : “10 MLAக்கள் ராஜினாமா செய்ய போறாங்களா?”.. தமிழக அரசியல் சூழல் குறித்து ஆளுநரிடம் டிடிவி தினகரன் பரபரப்பு புகார்!!




இதன் மூலம் கொள்ளையர்கள் மிகவும் திட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரிய வருகிறது. இதனையடுத்து கொள்ளையர்களை பிடிக்க 2 மாநில காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் – குன்றத்தூர் சாலையில் சோமங்கலம் என்ற ஊருக்கு அருகே தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆகஸ்ட் 25, 2026 நேற்று அதிகாலை பணம் எடுப்பது போல் உள் நுழைந்த கொள்ளையர்கள் வெல்டிங் மிஷினை பயன்படுத்தி ஏடிஎம் இயந்திரத்தை இரண்டாக உடைத்துள்ளனர். சிசிடிவி கேமராக்களை ஸ்பிரே அடித்து மறைத்துள்ளனர். பின்னர் கொள்ளையடித்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளர்.
இந்த சம்பவம் குறித்து வங்கி மேலாளரிடம் விசாரித்தபோது கடந்த ஆகஸ்ட் 23, 2026 அன்று மாலை அந்த ஏடிஎம்மில் ரூ.10 லட்சம் நிரப்பட்டதாகவும், அதில் ரூ.9 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தனர்.
இதையும் படிக்க : முந்திரி காட்டில் நள்ளிரவில் கேட்ட துப்பாக்கிச் சத்தம்.. தப்பியோட முயன்ற பிரபல ரவுடிக்கு நேர்ந்த கதி!!
கொள்ளையர்கள் தங்களின் அடையாளங்கள் வெளியே தெரிந்து விடக் கூடாது என்பதற்காக, ஏடிஎம் மையத்தின் உள்ளேயும் வெளியேயும் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் மீது கருப்பு நிற ஸ்பிரே பெயிண்ட்டை அடித்து மறைத்துள்ளனர். மேலும் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்கும் போது வங்கித் தலைமையகத்திற்கு தகவல் சொல்லும் பாதுகாப்பு எச்சரிக்கை அலாரத்தின் வயர்களை துண்டித்துள்ளனர். இதனால் ஏடிஎம் இயந்திரம் குறித்து நன்றாக தெரிந்த நபர்கள் இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைத்து காவல்துறையினர் தேடி வந்தனர். இந்த நிலையில் தான் அவர்கள் தெலங்கானா போலீஸிடம் இருந்து தப்பியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.