“மதிமுகவை சிறுமைப்படுத்துவதா?”.. அமைச்சர் செங்கோட்டையனுக்கு துரை வைகோ பதிலடி!!
Sengottaiyan vs Durai Vaiko: அதிமுகவிலிருந்து விலகி தவெகவில் அமைச்சராக உள்ள செங்கோட்டையன், "அதிமுக மதிமுக போலாகிவிடும்" எனப் பேசியதற்கு துரை வைகோ கண்டனம் தெரிவித்தார். இதற்கு விளக்கமளித்த செங்கோட்டையன், அதிமுகவின் பலவீனத்தைச் சுட்டிக்காட்டவே அவ்வாறு பேசியதாகவும், 10 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தவெகவில் இணைய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சென்னை, ஆகஸ்ட் 26: அதிமுகவில் இருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து, தற்போது தவெக ஆட்சியில் வருவாய்த்துறை அமைச்சராகவும், சட்டப்பேரவையில் அவையின் முன்னவராகவும் பொறுப்பு வகிக்கும் கே.ஏ.செங்கோட்டையன், “அதிமுக விரைவில் மதிமுகவைப் போல் மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்” என்று பேசியிருந்தார். அவரது இந்தப் பேச்சு மதிமுகவை இழிவுபடுத்தும் வகையில் அமைந்திருப்பதாக மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்திருந்தார்.
இதையும் படிக்க: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு.. இதைச் செய்யாவிட்டால் சிக்கல்?.. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
அப்படி பேசியதை தவிர்த்திருக்க வேண்டும்:
அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், அதிமுகவின் தற்போதைய உட்கட்சிப் பூசல்கள் மற்றும் தொடர் நிர்வாகச் சரிவைச் சுட்டிக்காட்டி விழா ஒன்றில் பேசியபோது, மதிமுகவின் அரசியல் நிலையை உதாரணமாக்கியிருந்தார். இது குறித்து உடனடியாகப் பதிலளித்த துரை வைகோ, “அண்ணன் செங்கோட்டையன் அனுபவமிக்க மூத்த அரசியல்வாதி. புதியவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டியவர், எங்களது இயக்கத்தைப் பற்றி இப்படிப் பேசியிருப்பதைத் தவிர்த்திருக்க வேண்டும். அவர் வாய் தவறிச் சொல்லியிருந்தாலும், அது எங்கள் லட்சக்கணக்கான இயக்கத் தோழர்களின் மனதைப் புண்படுத்தியுள்ளது” எனக் காட்டமாகக் குறிப்பிட்டிருந்தார்.
யாரையும் காயப்படுத்த பேசவில்லை:
துரை வைகோவின் இந்த கண்டனப் பேச்சைத் தொடர்ந்து, தவெக அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தனது கருத்துக்கு விளக்கமளிக்கும் வகையில் கூடுதல் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். அதில், “அதிமுகவின் தற்போதைய நிலைமையையும், தொண்டர்களை விட்டுவிட்டு தலைவர்கள் மட்டுமே அதிகாரப் போட்டி போடுவதையும் சுட்டிக்காட்டவே நான் அந்த உதாரணத்தைக் குறிப்பிட்டேன். தவெக தலைவர் விஜய் எங்களுக்குக் கற்றுக்கொடுத்த அரசியலில் எந்த இயக்கத்தையும் தரம் தாழ்த்திப் பேச வேண்டிய அவசியமில்லை. ஆனால், அதிமுகவிலிருந்து மேலும் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் தவெகவில் இணையத் தயாராக இருக்கும் இச்சூழலில், எதிர்க்கட்சிகளின் பலவீனத்தை சுட்டிக்காட்டுவதே என் நோக்கமே தவிர, யாரையும் தனிப்பட்ட முறையில் காயப்படுத்துவதல்ல” என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு.. கர்நாடக சிஐடி விசாரணைக்கு மாற்றம்.. சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை!!
பரபரப்பை கிளப்பிய பேச்சு:
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தவெக ஆட்சி அமைத்துள்ள சூழலில், அதிமுகவின் முன்னணி தலைவர்கள் பலரும் தவெகவை நோக்கி நகர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், கொங்கு மண்டலத்தின் மூத்த அரசியல் முகம் கே.ஏ.செங்கோட்டையனுக்கும் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோவிற்கும் இடையே வெடித்துள்ள இந்த வார்த்தைப் போர், தமிழக அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைத்தளங்களிலும் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.