கரையை கடந்த ‘சென்யார்’… உருவாகும் புதிய புயல்.. தமிழகத்திற்கு அதி கனமழை எச்சரிக்கை!!
தமிழகத்தில் நவ.29ம் தேதி முதல் டிச.1ம் தேதி வரை 3 நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிக கனமழை முதல் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயலின் நகர்வை பொறுத்து பல இடங்களில் அதி கனமழை வரையும் பெய்வதற்கான சூழல் இருப்பதாகவே தற்போது கணிக்கப்பட்டிருப்பதாகவும் தனியார் வானிலை ஆய்வுளர்கள் கூறுகின்றனர்.
சென்னை, நவம்பர் 27: மலாக்கா ஜலசந்தில பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ‘சென்யார்’ புயலாக வலுப்பெற்று இந்தோனேசியா கடற்கரை அருகே வலுவிழந்து கரையை கடந்தது. இந்த புயலினால் எந்த மழை வாய்ப்பும் நமக்கு இல்லாமல் போனது. தொடர்ந்து, இலங்கை அருகே நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வட தமிழகத்தில் நவ.29, 30 தேதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய தென்கிழக்கு இலங்கை-இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு இலங்கை மற்றும் அதனையொட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று (நவ.27) காலைக்குள் வலுப்பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : அடுத்த சுற்று வடகிழக்கு பருவமழை.. எப்போது தொடங்கும்? எந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை?
உருவாகும் புதிய புயல்?
தொடர்ந்து, இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24 மணி நேரத்தில் (நாளை), மேலும் வலுப் பெற்று,தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே திசையில் நகர்ந்து, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில், வட தமிழகம் – புதுச்சேரி கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், நாளை இரவு இந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வட இலங்கையை ஒட்டிய கடல் பகுதியில் புயலாகவும் மாற வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கூறியுள்ளார். அவ்வாறு புயலாக வலுப்பெறும் பட்சத்தில் ஏமன் நாடு பரிந்துரைத்துள்ள ‘DITWAH’ என பெயர் என சூட்டப்படம் எனக் கூறப்படுகிறது.




5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு:
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (நவ.27) ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், பலத்த தரை காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என தெரிவித்துள்ளது. மேலும், இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு:
தொடர்ந்து, நாளை (நவ.28) கடலோர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கன முதல் மிக கனமழையும், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : நெல்லையில் வெளுத்து வாங்கிய மழை: இடிந்து விழுந்த வீடுகள்.. வெள்ள அபாய எச்சரிக்கை!!
அதிகனமழை எச்சரிக்கை:
அதனைத்தொடர்ந்து, நவ.29, 30 மற்றும் டிச.1ஆம் தேதிகளில் திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், புதுக்கோட்டை, திருச்சி, திருப்பத்தூர், வேலூர், தருமபுரி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.