நடிகை த்ரிஷா தமிழகத்தின் துணை முதல்வராகலாம்… ஆர்.பி. உதயகுமார் கடும் விமர்சனம்!
RB Udhayakumar: தமிழகத்தின் துணை முதல்வராக பிரபல நடிகை த்ரிஷாவை நியமித்து விரைவில் அறிவிப்பு வெளிவரலாம் என்று அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் கடுமையா விமர்சனத்தை முன் வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
தமிழக அரசின் டெல்லி பிரதிநிதியாக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபரும், முதல்வர் ஜோசப் விஜய் கடைசியாக நடித்த ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளருமான வெங்கட நாராயணாவை நியமனம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நியமனத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், தனக்கு நட்புக்கும், உறவுக்கும் இலக்கணமாக இருக்கின்ற திரைப்பட நடிகை த்ரிஷாவை துணை முதல்வராக்க விரைவிலேயே அறிவிப்பு வெளிவரலாம். நட்புக்கு இலக்கணமானவர்கள் எல்லோருக்கும் அரசு பதவி வழங்கும் முதல்வர் ஜோசப் விஜய், எப்போது வேண்டுமானாலும் த்ரிஷாவை துணை முதல்வராக அறிவிப்பார் என்ற அதிர்ச்சியில் தமிழ்நாடு உறைந்து போய் உள்ளது என்று தெரிவித்தார்.
அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு
தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவரும், அந்த மாநிலத்தின் முதல்வர் டி. கே. சிவக்குமாருக்கு நெருக்கமானவருமான வெங்கட் நாராயணாவை தமிழக அரசு நியமித்ததற்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஏனென்றால், ஏற்கனவே தமிழகத்துக்கும், கர்நாடக மாநிலத்துக்கும் இடையே காவிரி நதி நீர் பிரச்சனை மற்றும் மேகதாது அணை விவகாரம் பிரச்னை இருந்து வருகிறது. இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஒருவரை தமிழகத்தின் சிறப்பு பிரதிநிதியாக ஏன் நியமிக்க வேண்டும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் படிக்க: பெண் அமைச்சரின் நள்ளிரவு ரெய்டு.. “சீல்” உடைத்து இயங்கிய 2 ஆலைகள்.. கலகலத்துபோன உரிமையாளர்கள்!




முதல்வரின் தனி செயலாளராக ஜோதிடர் நியமனம்
இது மட்டும் இன்றி தமிழக முதல்வரின் தனி செயலாளராக ( அரசியல்) முதல்வர் விஜய்யின் ஜோதிடரான ரிக்கி ராதன் பண்டிட் என்பவரை தமிழக அரசு நியமித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதற்கும் பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்த அறிவிப்பு திரும்ப பெறப்பட்டது. இதே போல, கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வர் ஜோசப் விஜய்யின் அரசியல் பிரிவு தனி செயலாளராக அவரது மேனேஜராக இருந்து வந்த ஜெகதீஷ் பழனிசாமி என்பவரை நியமித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்து இருந்தது. இதற்கும் பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பை பதிவிட்டு வந்தனர்.
விஜய் மேனேஜருக்கு தனி செயலர் பதவி அளிப்பு
இதில், அரசாணை வெளியாவதற்கு முன்னதாகவே, ஜெகதீஷ் பழனிசாமி தனது சமூக வலைதளத்தில் தான் முதல்வரின் தனி செயலாளராக நியமிக்கப்பட்டு இருப்பதாக பதிவிட்டிருந்தார். அத்துடன், அரசாணையில் மே மாதம் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், ஒரு மாதம் மறைமுகமாக இவரை நியமித்து மறைத்து வைத்திருந்தது ஏன் என்றும் கேள்வி எழுப்பத் தொடங்கி இருந்தனர். இந்த நிலையில், தமிழகத்தின் துணை முதல்வராக த்ரிஷா நியமிக்கப்படலாம் என்று ஆர்.பி.உதயகுமார் கருத்து பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க: பெற்ற தாயின் மனம் கல்லான சம்பவம்.. ரூ.1.39 லட்சத்துக்கு பச்சிளம் பெண் குழந்தை விற்பனை.. தம்பதி உள்பட 3 பேர் கைது!