தமிழக MLA-க்கள் எண்ணிக்கை 351- ஆக உயரும்.. தொகுதி மறுவரையறையால் மெகா மாற்றம்.. அன்புமணி கணிப்பு!
Anbumani On Constituency Delimitation : மக்களவை தொகுதி மறுவரையறையால் தமிழகத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 351- ஆக உயரும் எனவும், இதில், கட்டாயமாக 117 பெண்கள் எம்எல்ஏக்கள், அமைச்சர்களாக வருவார்கள் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
மத்திய அரசு மேற்கொள்ள இருப்பதாக கூறப்படும் மக்களவை தொகுதி மறுவரையறை தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காங்கிரஸ் கட்சி தலைமையின் அழுத்தத்தின் காரணமாகவே, தமிழக வெற்றிக் கழக அரசு தொகுதி மறு வரையறைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில் தொகுதி மறு வரையறை தேவையானது ஆகும். ஏனென்றால், தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகள் உள்ள நிலையில், தொகுதி மறு வரையறை மேற்கொள்ளப்பட்டால் தொகுதிகளின் எண்ணிக்கை 59- ஆக உயரும். இது தொடர்பான மசோதாவை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த போது, அனைத்து மாநிலங்களிலும் தொகுதிகளின் எண்ணிக்கை 50 சதவீதம் உயர்த்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்திருந்தார்.
தமிழக எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 351- ஆக உயரும்
நாட்டின் 543 தொகுதிகளில் தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகள் என்பது 7.1 சதவீதம் ஆகும். தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் இந்த அளவு மாறாது. எம்பிக்களின் எண்ணிக்கை 39- இல் இருந்து 59- ஆகவும், 234 சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 351- ஆகவும் உயரும். இதன் மூலம் 117 எம்எல்ஏக்கள் கட்டாயமாக பெண்கள் தான் வர முடியும். தொகுதி மறு வரையறையால் பெண் எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்களின் எண்ணிக்கை கூடுதலாகும். தமிழகத்தில் ஒரு எம்பிக்கு சராசரியாக 20 லட்சம் மக்கள் உள்ளனர்.
மேலும் படிக்க: ரீல்ஸ் போட்டதும் ரீல் விட்டதுமே தவெக அரசின் சாதனை… எடப்பாடி கே. பழனிசாமி கடும் விமர்சனம்!




ஒரு எம்.பி.க்கு 20 லட்சம் மக்கள் உள்ளனர்
இந்த 20 லட்சம் மக்களை ஒரு மக்களவை உறுப்பினரால் பார்க்க முடிவதில்லை. கடந்த 5 ஆண்டுகளில் தர்மபுரியின் எம். பி- ஆக இருந்த என்னால் 2 ஆயிரம் கிராமங்களை சரியாக பார்க்க முடியாமல் போனது. இதற்கெல்லாம் தீர்வாக தொகுதி மறு வரையறை கொண்டுவரப்பட்டால் ஒரு எம்பிக்கான மக்கள் தொகை 15 லட்சமாகவும், வாக்காளர்கள் எண்ணிக்கை 10 லட்சமாகவும் குறைய வாய்ப்புள்ளது. இங்கிலாந்து நாட்டை எடுத்துக் கொண்டால் 6.5 கோடி மக்களுக்கு 650 எம்பிக்கள் உள்ளனர். அந்த நாட்டில் ஒரு எம்பிக்கு ஒரு லட்சம் மக்கள் மட்டுமே உள்ளனர்.
தொகுதி மறுவரையறையால் பல்வேறு நன்மைகள்
சீனா நாட்டில் 140 கோடி மக்கள் தொகைக்கு சுமார் 3,000 எம்பிக்கள் உள்ளனர். எனவே, இந்தியாவில் தொகுதி மறு வரையறை செய்யப்பட்டால் மக்களை சாதாரணமாக எம்பிக்கள் காண முடியும். அரசின் திட்டங்களையும் கொண்டு சேர்க்க முடியும். தொகுதியும் மறுசீரமைப்பால் வட மாநிலங்களில் நம்பிக்கை எண்ணிக்கை அதிகமாகும், தெற்கு மாநிலங்களில் எம்பிக்கள் எண்ணிக்கை குறையும் என்று கூறுவதில் அர்த்தமில்லை என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: தமிழக காங்கிரஸில் 77 மாவட்ட பார்வையாளர்கள் நியமனம்… பீட்டர் அல்போன்ஸ் தகவல்!