முதல்வர் விஜய்க்கு ஷாக் கொடுத்த எடப்பாடி தவெக வேட்பாளர்.. பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியம்!
TVK Candidate Joined ADMK : எடப்பாடி சட்டமன்ற தொகுதியின் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் அருண் குமார், எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் தாய் கழகமான அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இதற்கு தவெகவில் கடும் கண்டனம் எழுந்து வருகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் சார்பில் 234 தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். இதே போல, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான எடப்பாடியில் தவெக சார்பில் அருண்குமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்தார். ஆனால், வேட்பு மனு பரிசீலனையின் போது, அவர் திடீரென மாயமானார். இதனால், அந்த தொகுதியில் தவெக சார்பில் நேரடியாக யாரும் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த அருண்குமார் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் இன்று சனிக்கிழமை ( ஆகஸ்ட் 15) அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இதற்காக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த அருண்குமார் தனக்கு அதிமுகவிலேயே தொடர விருப்பம் இருப்பதாக தெரிவித்து கட்சியில் இணைந்தார்.
அதிமுக டூ தவெக டூ அதிமுக
இவர், இதற்கு முன்பு அதிமுகவில் இருந்த நிலையில், அதிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து, பின்னர் மீண்டும் தாய் கழகமான அதிமுக விலையை இணைந்தது குறிப்பிடத்தக்கது. அருண்குமாரின் இந்த திடீர் கட்சி மாற்றத்தால் தமிழக வெற்றி கழகம் தரப்பில் கடும் அதிருப்தி கிளம்பியுள்ளது. இதில், தேர்தல் நேரத்தில் திட்டமிட்டே தனது வேட்பு மனுவை நிராகரிக்க செய்தார் என்றும், தற்போது, அந்த விவகாரம் வெளியில் தெரிந்த காரணத்தால் அவர் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார் என்றும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.
மேலும் படிக்க: ரீல்ஸ் போட்டதும் ரீல் விட்டதுமே தவெக அரசின் சாதனை… எடப்பாடி கே. பழனிசாமி கடும் விமர்சனம்!




எடப்பாடிக்கு எதிராக களமிறக்கப்பட்ட தவெக வேட்பாளர்
தமிழக சட்டமன்ற தேர்தலின் போது எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தவெக சார்பில் அருண்குமார் களம் இறக்கப்பட்டிருந்தார். இதற்காக, அவர் தனது பெயரிலும், தனது மனைவி பெயரிலும் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், வேட்பு மனு பரிசீலனையின் போது, தேவையான ஆதாரங்களை வீட்டுக்கு சென்று எடுத்து வருவதாக கூறி சென்ற அருண்குமார் மீண்டும் திரும்பவில்லை. இதனால், அவரை எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு கடத்தி விட்டதாக தவெகவினர் பெரும் குற்றசாட்டை முன் வைத்திருந்தனர்.
பழனிசாமிக்கு எதிராக தவெக போட்டியில்லை
இதனிடையே, அருண்குமாரின் வேட்பு மனு மற்றும் அவரது மனைவியின் வேட்பு மனு ஆகிய இரண்டுமே போதிய ஆவணங்கள் மற்றும் முறைப்படி பூர்த்தி செய்யாத காரணங்களால் நிராகரிக்கப்பட்டிருந்தது. இதனால், எடப்பாடி தொகுதியில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தவெக போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது. இருப்பினும், விஜய் ரசிகர் மன்றத்தின் முன்னாள் நிர்வாகியான பிரேம் குமார் சுயேச்சையாக வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.
எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற்ற பழனிசாமி
அவருக்கு, தவெக தலைவர் விஜய் ஆதரவு தெரிவித்து இருந்தார். இருப்பினும், சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி 1,45,933 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தவெக ஆதரவு சுயேச்சை வேட்பாளர் பிரேம் குமார் 50,823 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: 80- ஆவது சுதந்திர தின விழா.. முதல்வர் விஜய்யிடம் விருது பெற்றவர்கள் விவரம்!