மகளுக்கு தொடர் காதல் தொல்லை.. தட்டிக்கேட்ட தந்தை கொடூர கொலை.. விருதுநகரில் பதற்றம்!
Virudhunagar Murder : விருதுநகர் மா வட்டத்தில் பெற்ற மகளுக்கு காதல் தொல்லை அளித்தவரை தட்டி கேட்ட மாணவியின் தந்தை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக வத்திராயிருப்பு போலீசார் 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே உள்ள கோட்டையூர் கிழக்கு காலனி பகுதியை சேர்ந்தவர் அய்யனார் ( 38 வயது). இவருக்கு ஒரு மகள் உள்ளார். இவர், அந்த பகுதியில் உள்ள பள்ளியில் கல்வி பயின்று வருகிறார். அவர், பள்ளி சென்று வரும்போது அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி ( 21 வயது) என்பவர் மாணவியை வழிமறித்து காதலிப்பதாக கூறி தினமும் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவி தனது தந்தை அய்யனாரிடம் தெரிவித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அய்யனார், பெரிய சாமியை அழைத்து கண்டித்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இருவரது குடும்பத்தினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு விரோதமாக மாறியது. இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு அய்யனார் அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
மாணவியின் தந்தைக்கு சரமாரி கத்திக் குத்து
அப்போது, பெரியசாமி, அவரது அண்ணன் அழகுராஜா, அவரது மனைவியை பேச்சியம்மாள் மற்றும் உறவினர் கருப்பசாமி ஆகியோர் அய்யனாரிடம் திடீரென தகராறில் ஈடுபட்டனர். இதனால், இருதரப்பினரிடையே வாக்குவாதம் முற்றி கை கலப்பாக மாறியது. இதில், ஆத்திரமடைந்த பெரியசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அய்யனாரை சரமாரியாக குத்தினார். இதில், பலத்த காயமடைந்த அய்யனார் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து உயிருக்கு போராடினார்.
மேலும் படிக்க: 80வது சுதந்திர தினம்.. 3.29 மணி நேரம் தண்ணீரில் மிதந்து மாணவி புதிய சாதனை!




சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த தந்தை
இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைத்தனர். ஆனால், செல்லும் வழியில் அய்யனார் பரிதாபமாக உயிரிழந்தார். இதை தொடர்ந்து, அவரது சடலம் பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அய்யனாரின் குடும்பத்தினர் வத்திராயிருப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து பெரியசாமி, கருப்பசாமி, அழகுராஜா ஆகிய மூன்று பேரை அதிரடியாக கைது செய்தனர்.
வீட்டில் இருந்து 17 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்
மேலும், சந்தேகத்தின் அடிப்படையில் பெரியசாமியின் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டதில், அங்கு விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தும் 17 நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, நாட்டு வெடிகுண்டுகளை பறிமுதல் செய்த போலீசார் அவர்களை காவல் நிலையத்தில் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விருதுநகர் மாவட்ட சிறையில் அடைத்தனர். பெற்ற மகளுக்கு காதல் தொல்லை அளித்தவரை தட்டிக் கேட்ட தந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை