கோவை மாநகராட்சியில் 54 அரசு ஊழியர்கள் கூண்டோடு பணி நீக்கம்.. உச்சநீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!
Coimbatore Corporation Junior Assistants Dismissed : கோயம்புத்தூர் மாநகராட்சியில் முறைகேடாக நியமனம் செய்யப்பட்ட 54 இளநிலை உதவியாளர்கள் அதிரடியாக பணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர். இது தொடர்பாக உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது .
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கோயம்புத்தூர் மாநகராட்சியில் 54 இளநிலை உதவியாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இந்த நியமனத்தில் முறைகேடு நிகழ்ந்ததாக கடந்த 2021- ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கோயம்புத்தூர் மாநகராட்சியில் முறைகேடாக பணி நியமனம் செய்யப்பட்ட 54 இளநிலை உதவியாளர்களை பணி நீக்கம் செய்யுமாறு உத்தரவிட்டது. மேலும், காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை மட்டுமே நியமனம் செய்ய வேண்டும் எனவும், முறைகேடான பணி நியமனங்களில் தொடர்புடைய அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது உத்தரவில் குறிப்பிட்டிருந்தது. இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
54 இளநிலை உதவியாளர்கள் அதிரடியாக பணி நீக்கம்
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றம் அளித்த உத்தரவை உறுதி செய்து, மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், கோவை மாநகராட்சிகள் முறைகேடாக நியமனம் செய்யப்பட்ட 54 இளநிலை உதவியாளர்களை அதிரடியாக பணி நீக்கம் செய்து மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அதன்படி, 54 இளநிலை உதவியாளர்களும் இன்று வெள்ளிக்கிழமை ( ஆகஸ்ட் 14- ஆம் தேதி) முதல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் படிக்க: சீருடையில் மது அருந்திய பள்ளி மாணவிகள்.. தலைமை ஆசிரியை மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை.. கன்னியாகுமரியில் பரபரப்பு!




இளநிலை உதவியாளர்கள் நியமனத்தின் பின்னணி
கடந்த 2021- ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் எஸ். பி. வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தார். அப்போது, கோயம்புத்தூர் மாநகராட்சியில் 69 இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு 654 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில், 440 பேர் நேர்முக தேர்வுக்கும், சான்றிதழ் சரிபார்ப்புக்கும் அழைக்கப்பட்ட நிலையில், 54 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, அவர்கள் பணியிலும் அமர்த்தப்பட்டனர். இதில், முறைகேடு நிகழ்ந்ததாக 2016- ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாநகராட்சியில் தூய்மை பணியாளராக நியமிக்கப்பட்ட ஈஸ்வரி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
உயர்நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்த உச்சநீதிமன்றம்
அந்த மனுவில், தங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும், இந்த பணி நியமனங்களை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மூலமாகவோ அல்லது மற்ற தேர்வு நடைமுறைகளையோ பின்பற்றாமல் உள்ளாட்சித் துறையில் 54 இளநிலை உதவியாளர் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தது தெரியவந்தது. இந்த நியமனங்கள், நேர்மையாக நடைபெறவில்லாத காரணத்தால் அவர்களை பணிநீக்கம் செய்யுமாறு உத்தரவிட்ட நிலையில், தற்போது, இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: நெடுஞ்சாலைத்துறை முறைகேடு வழக்கு.. எ.வ.வேலு மீது நோ ஆக்சன்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!