சுடுகாட்டில் கொடூரம்.. கும்மிடிப்பூண்டியில் சிறுவன் கொடூர கொலை.. கல்லறை மீது சடலம் வீச்சு!
Thiruvallur Boy Murdered : திருவள்ளூர் மாவட்டத்தில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட தகராறில் இருந்து வந்த முன் விரோதம் காரணமாக 17 வயது சிறுவனை மர்ம கும்பல் கொடூரமாக தாக்கி கொலை செய்தது. இந்தச் சம்பவத்தில் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகிறது.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே உள்ள சானாபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சன் ( 17 வயது). இவர், 12- ஆம் வகுப்பு படித்து முடித்துள்ள நிலையில், பட்டப்படிப்பு படிப்பதற்காக கல்லூரியில் விண்ணப்பித்திருந்தார். இந்த நிலையில், இளைஞர் ரஞ்சன் அந்த பகுதியில் உள்ள கல்லறையின் மீது ரத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடப்பதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், இது தொடர்பாக கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளைஞர் ரஞ்சனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்வதற்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக சிறுவனின் குடும்பத்தினர் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
முன்விரோதம் காரணமாக சிறுவன் கொலை
அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதில், சிறுவன் ரஞ்சன் தரப்பினர் மற்றும் மற்றொரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் மற்றும் முன் விரதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நிகழ்ந்திருப்பதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது. அதன்படி, சிறுவன் ரஞ்சன் அந்த பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த எதிர் தரப்பை சேர்ந்தவர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் படிக்க: கீழ் மதுரையில் பெரும் பரபரப்பு.. ரயிலை நிறுத்த தவறிய லோகோ பைலட்.. ரயில்வே நிர்வாகம் அதிரடி நடவடிக்கை!




சிறுவன் கொலை செய்யப்பட்டது எப்படி
இதில், இரு தரப்பினர் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு, சிறுவனை சரமாரியாக தாக்கியுள்ளனர். தொடர்ந்து, அருகில் கிடந்த கல் உள்ளிட்ட பொருட்களால் ரஞ்சனை கொடூரமான முறையில் தாக்கியதில், அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பின்னர், அந்த கும்பல் சிறுவன் ரஞ்சனின் சடலத்தை அந்த பகுதியில் உள்ள சுடுகாட்டில் இருந்த கல்லறை மீது தூக்கி வீசிவிட்டு தப்பி ஓடி உள்ளது தெரியவந்தது. இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்வதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தனிப்படை அமைத்து குற்றவாளிகளுக்கு வலைவீச்சு
மேலும், சிறுவன் பயன்படுத்திய செல்போன் மற்றும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆகியவற்றை தனிப்படை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அதில், பதிவான காட்சிகளின் அடிப்படையில் கொலை குற்றவாளிகளை கைது செய்வதற்கான முயற்சிகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 17 வயது சிறுவன் கொடூரமான முறையில் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: சிவகாசி அருகே சோகம்.. திடீரென அதிர்ந்த பட்டாசு ஆலை.. ஒரே நேரத்தில் பறிபோன 3 உயிர்கள்!