தூத்துக்குடியில் கொடூர சம்பவம்.. விவசாயி அடித்துக் கொலை.. பதற்றத்தில் கிராமம்!
Thoothukudi Crime : தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாய தொழிலாளியை செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டை விட்டு வெளியே வரவழைத்து டைல்ஸ் கல்லால் தாக்கி கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், பிரையண்ட் நகரை சேர்ந்தவர் ஞானப்பிரகாசம் ( 47 வயது). இவரது மனைவி பாரதி. இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். தற்போது, ஞானப்பிரகாசம் புதுக்கோட்டை அருகே உள்ள கூட்டாம்புளி பிரதான சாலையில் உள்ள டைலர் கடை தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் வசித்து வருகிறார். மேலும், அந்தப் பகுதியிலேயே விவசாயமும் செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்று இரவு ஞானபிரகாசத்தில் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது, அவரிடம் அதிக சத்தமாக பேசியவாறு ஞான பிரகாசம் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பிறகு அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதை அறிந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அவரை தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.
காலி மனையில் கொலையுண்டு கிடந்த தொழிலாளி
பின்னர், இன்று அந்த பகுதியில் உள்ள காலி மனையில் தலையில் ரத்த காயங்களுடன் விவசாயி ஞானப்பிரகாசம் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத், ரூரல் காவல் துணை கண்காணிப்பாளர் சுதீர் மற்றும் புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் குமாரவேல் பாண்டியன், உதவி காவல் ஆய்வாளர் முத்து செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் படிக்க: தருமபுரியில் சட்டவிரோத பாலின கண்டறிதல்- கருக்கலைப்பு.. செவிலியர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!




கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை
தொடர்ந்து, விவசாயியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனை செய்வதற்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக ஞானபிரகாசத்தின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், புதுக்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில், ஞானப்பிரகாசத்தை கொலை செய்தவர்கள் யார். கொலை செய்வதற்கான காரணம் என்ன என்பன உள்ளிட்ட கோணங்களில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தொழிலாளி செல்போன் ஆய்வு
மேலும், ஞானபிரகாசத்தில் செல்போன் எண்ணில் கடைசியாக வந்த அழைப்புகள் மற்றும் அவர் கடைசியாக யாரிடம் பேசினார் என்ற விவரங்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். அதன் அடிப்படையில், கொலையாளிகளை கைது செய்வதற்காக நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றியும் போலீசார் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: லஞ்ச ஒழிப்புத் துறையின் அதிரடி வேட்டை.. தருமபுரி ஊராட்சி மன்ற தலைவர் உட்பட 5 மீது வழக்கு பதிவு.. ரூ.14.50 லட்சம் பறிமுதல்!