தென்காசியில் மின் இணைப்புக்கு லஞ்சம்.. ஊழல் தடுப்பு துறை வைத்த பொறி.. வசமாக சிக்கிய வணிக ஆய்வாளர்!
Tenkasi EB Commercial Inspector Arrested : தென்காசி மாவட்டத்தில் புதிய வீட்டுக்கு புதிதாக மின் இணைப்பு வழங்குவதற்கு ரூ. 2000 லஞ்சம் கேட்ட மின்வாரியத்தின் வணிக ஆய்வாளரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம், திருவேங்கடம் வட்டம், கொக்கு குளத்தை சேர்ந்தவர் ராஜு. இவரது மகன் காளிராஜ் ( 32 வயது). இவர், தனது தந்தை வசித்த பழைய வீட்டை புதுப்பித்து, அதற்கு மின் இணைப்பு பெறுவதற்காக கடந்த ஆகஸ்ட் 12- ஆம் தேதி பழங்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் வணிக ஆய்வாளர் கருப்பசாமியிடம் விவரங்கள் கேட்டுள்ளார். அவர் அறிவுறுத்தியதின்படி, ஆன்லைன் மூலமாக, புதிய வீட்டுக்கு புதிதாக மின் இணைப்பு வழங்க கோரி ஆன்லைனில் விண்ணப்பித்து அதற்கான இணைய வழி கட்டணம் ரூ.5,575- ஐ செலுத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து, நேற்று ஆகஸ்ட் 13- ஆம் தேதி பிற்பகல் பழங்கோட்டை மின்வாரிய அலுவலகத்திற்கு காளிராஜ் சென்றார். அங்கு, அலுவலகத்தில் இருந்த வணிக ஆய்வாளர் கருப்பசாமியிடம் புதிய மின் இணைப்புக்கான விண்ணப்பம் மற்றும் ஆவணங்களை கொடுத்துள்ளார்.
ரூ. 2 ஆயிரம் லஞ்சம் கேட்ட ஆய்வாளர்
அப்போது, புதிய வீட்டை நேரில் பார்வையிட்டு அறிக்கை அனுப்புவதற்கு ரூ. 2 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று காளிராஜிடம் கேட்டுள்ளார். இதற்கு, காளிராஜ் தன்னிடம் பணம் இல்லை என்றும், புதிய மின் இணைப்புக்கான அனைத்து கட்டணத்தையும் ஆன்லைன் வழியாக செலுத்தி விட்டேன் என்று தெரிவித்துள்ளார். இதனை கேட்ட வணிக ஆய்வாளர் கருப்பசாமி ரூ. 2 ஆயிரம் கொடுத்தால் தான் புதிய மின் இணைப்பு வழங்குவதற்காக வீட்டை பார்வையிட்டு அறிக்கை அனுப்புவேன். இல்லையெனில், புதிய மின் இணைப்பு கிடைக்காது என்று மிரட்டி உள்ளார்.
மேலும் படிக்க: சிவகாசி அருகே சோகம்.. திடீரென அதிர்ந்த பட்டாசு ஆலை.. ஒரே நேரத்தில் பறிபோன 3 உயிர்கள்!




ஊழல் தடுப்பு காவல் நிலையத்தில் புகார்
இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான காளிராஜ் லஞ்சம் கொடுக்க விரும்பாத நிலையில், இது தொடர்பாக தென்காசி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் ரசாயன பொடி தடவப்பட்ட ரூ. 2 ஆயிரத்தை மின்வாரிய வணிக ஆய்வாளரிடம் கொடுக்குமாறு காளிராஜிடம் போலீசார் அறிவுறுத்தினர். அதன்படி, பழங்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் பணியில் இருந்த வணிக ஆய்வாளர் கருப்பசாமியிடம் ரூ.2 ஆயிரத்தை காளிராஜ் இன்று வெள்ளிக்கிழமை கொடுத்தார்.
கையும் களவுமாக சிக்கிய வணிக ஆய்வாளர்
அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர் பாலசுதர் தலைமையிலான போலீசார் அதிரடியாக வணிக ஆய்வாளர் கருப்பசாமியை சுற்றி வளைத்து கைது செய்தனர். தொடர்ந்து, அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர், அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க: தருமபுரியில் சட்டவிரோத பாலின கண்டறிதல்- கருக்கலைப்பு.. செவிலியர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!