பிரம்மாண்டமாக உருவாகிறது முதல்வரின் புதிய அலுவலகம்.. ரூ. 5.5 கோடியில் டெண்டர் கோரிய பொதுப் பணித் துறை!
Chief Minister New Office ; தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய்யின் புதிய அலுவலகத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக பொதுப் பணித் துறை ரூ. 5. 5 கோடிக்க டெண்டர் வெளியிட்டு உள்ளது. இந்த டெண்டருக்கு செப்.1-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையின் முதல் தளத்தில் முதல்வர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. முன்னாள் முதல்வர்கள் பயன்படுத்திய இந்த அறைக்கு அருகே சட்ட பேரவை, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் அலுவலகங்கள் அமைந்துள்ளன. இந்த நிலையில், இட நெருக்கடி காரணமாக முதல்வர் அலுவலகம் தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் 10- ஆவது தளத்துக்கு மாற்றம் செய்யப்பட உள்ளது. இதற்கான பணிகளை மேற்கொள்வதற்கு ரூ.5.5 கோடியில் பொதுப் பணித் துறை டென்டர் வெளியிட்டுள்ளது. இந்த பணிகளை விரைந்து முடிப்பதற்காக 3 பிரிவுகளாக டெண்டர் கோரப்பட்டுள்ளது. இதில், 10- ஆவது தளத்தில் உள்ள பிளாக் 1-க்கு ரூ.2.41 கோடி, பிளாக் 2- க்கு ரூ.2.01 கோடி, பிளாக் 3- க்கு ரூ. 1.12 கோடி என டெண்டர் தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
செப்டம்பர் 1- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்
இந்த பணிகளுக்கு டெண்டர் எடுக்க விரும்புவர்கள் வருகிற செப்டம்பர் 1- ஆம் தேதி மாலை 3 மணிக்குள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் அலுவலகம் மட்டுமின்றி, முதல்வரின் முதன்மை செயலாளர், ஆலோசகர்கள் அறைகள் நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10- ஆவது தளத்துக்கு மாற்றம் செய்யப்பட உள்ளது. ஏற்கனவே, அங்கு செயல் பட்டு வந்த செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை பிரிவுகள் கலைவாணர் அரங்குக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : “ஏரியிலிருந்து மண் திருட்டு.. அரசுக்கு ரூ.8 கோடி இழப்பு!”.. முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மீது அதிரடி புகார்.. லஞ்ச ஒழிப்புத் துறையில் முறையீடு!




பணிகளை விரைந்து முடிக்க 3 பிரிவுகளாக டெண்டர்
எனவே, டெண்டர் எடுக்கும் நிறுவனங்கள் சார்பில் விரைவில் பணிகள் தொடங்கப்பட்டு விரைந்து முடிக்கப்படும் என தெரிகிறது. இந்த பணிகள் முடிவடையும் நிலையில், முதல்வர் ஜோசப் விஜய்யின் அலுவலகம் பயன்பாட்டுக்கு வர உள்ளது. ஏற்கனவே, முதல்வர் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமை செயலகமும் இடமாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, பட்டினப்பாக்கம் சிக்னல் பகுதியில் அரசுக்கு சொந்தமான சுமார் 100 ஏக்கர் நிலம் உள்ளது.
இடம் மாறும் தலைமைச் செயலகம்
அங்கு, புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கு முன்னாள் முதல்வர்கள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டனர். இயற்கை சீற்றங்களின் போது பெரிய பாதிப்பு இருக்கும் என்று அதிகாரிகள் கூறியதை அடுத்து, அந்த திட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில், தற்போதைய முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பட்டினம் பாக்கம் சிக்னல் அருகே புதிய தலைமைச் செயலகம் கட்ட முயற்சி மேற்கொண்டு வருவதாகவும், இதற்காக அரசு இன்ஜினியர்கள் முதல் கட்ட ஆய்வுகளை முடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: “அதிமுகவில் மீண்டும் வெடித்த உட்கட்சிப் பூசல்!”.. இபிஎஸ்-க்கு எதிராக முன்னாள் அமைச்சர்கள் ரகசிய ஆலோசனை!!