அனந்தபுரி ரயிலில் ரூ. 3 கோடி வைர நகை கொள்ளை.. துப்பறிந்து தூக்கிய தனிப்படை… சினிமா பாணியில் சிக்கிய கில்லாடிகள்!
Ananthapuri Express Diamond Jewelry Theft : சென்னையில் இருந்து புறப்பட்ட அனந்தபுரி ரயிலில் நகை கடை மேற்பார்வையாளரிடம் இருந்த ரூ.3 கோடி வைர நகைகளை கொள்ளை அடித்த பீகாரை சேர்ந்த இருவரை திருச்சி ரயில்வே போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
சென்னை மாவட்டம், வேப்பேரி பகுதியை சேர்ந்தவர் தீபக் சஞ்செட்டி ( 32 வயது). இவர், சென்னை டி. நகரில் உள்ள மணி ஜுவல்லர்ஸ் நகைக் கடையில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஜூலை மாதம் 23- ஆம் தேதி அனந்தபுரி ரயிலில் பயணம் செய்த போது, ரூ.3 கோடி மதிப்பிலான வைர நகைகளை தனது பையில் வைத்திருந்தார். இந்த ரயிலானது திருச்சி ரயில் நிலையத்தை அடைந்தபோது, தீபக் சஞ்செட்டி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். பின்னர், சிறிது நேரம் கழித்து கண் விழித்த போது, தனது அருகில் வைக்கப்பட்டிருந்த பையை காணாமல் திடுக்கிட்டார். பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக திருச்சி ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
மதுரையில் இருந்து பின் தொடர்ந்த மர்ம நபர்கள்
இதில், போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், கல்லகம் ரயில் நிலையத்தில் ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. அதன் அடிப்படையில், அனந்தபுரி ரயிலில் முதல் வகுப்பில் பயணித்த பயணிகள் குறித்த பட்டியலை போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். இதில், இரு பயணிகள் ரயிலில் இருந்து பாதியில் இறங்கி சென்ற காட்சிகள் ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தது. அதன்படி, அந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் மதுரையில் இருந்து தீபக் சஞ்செட்டியை பின் தொடர்ந்து வந்தது தெரிய வந்தது.
மேலும் படிக்க: திமுகவில் அதிரடி மறுசீரமைப்பு.. 10 மாவட்ட செயலாளர்கள் மாற்றப் பட வாய்ப்பு?




மாநகராட்சி கவுன்சிலர் மகன் உள்பட இருவர் கைது
மேலும், அந்த இரு நபர்களின் புகைப்படங்களை பல்வேறு மாநில போலீசாருக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர். இதில், ஒரு வார விசாரணைக்கு பிறகு சிற்குரி அம்பானில் குற்றவாளிகளான பாட்னா மாநகராட்சி கவுன்சிலர் மகன் ராஜன் குமார் மற்றும் அவரது நண்பர் அமர்நாத் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களை, தமிழகத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், அனந்தபுரி ரயிலில் ஏ 42 இருக்கையில் அமர்நாத் என்பவரின் பையை திருடி ராஜன் குமாரிடம் கொடுத்தது தெரிய வந்தது.
மும்பை தப்பி சென்றவர்களை தூக்கிய போலீஸ்
மேலும், சென்னைக்கு வந்த இருவரும் சௌகார்பேட்டையில் உள்ள நகைக்கடையில் நகையின் மதிப்பை கேட்டறிந்தனர். பின்னர் சென்னையில் இருந்து மும்பைக்கு ரயிலில் புறப்பட்டு சென்றனர். முன்னதாக, அவர்கள் முன்பதிவு செய்திருந்த ரயில் டிக்கெட் கேன்சல் செய்துவிட்டு, தட்கல் மூலமாக டிக்கெட் பதிவு செய்து மும்பைக்கு பயணம் செய்தது தெரியவந்தது. இந்த சம்பவம் ரயில் நிலையத்தில் பரபரப்பை கிளப்பி உள்ளது.
மேலும் படிக்க: டாஸ்மாக்கில் பிரபல மதுபான பிராண்டுகளுக்கு அதிரடி தடை.. மதுப்பிரியர்களுக்கு ஷாக்!!