தருமபுரி ரயில் நிலையத்தில் பேரதிர்ச்சி.. ஓடும் ரயிலில் இருந்து விழுந்த சிறுவன் உடல் துண்டாகி பலி.. தந்தை கண்முன்னே சோகம்!
Boy Dies Dharmapuri Railway Station : தருமபுரி ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய தந்தை மற்றும் மகன் தவறி விழுந்ததில், ரயிலின் சக்கரம் ஏறி இறங்கியதில் சிறுவன் பரிதாபமாக உடல் துண்டாகி உயிரிழந்தார். தந்தை தீவிர சிகிச்சையில் உள்ளார்.
தருமபுரி மாவட்டம், பைசு அள்ளி பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் ( 34 வயது). இவரது மகன் யாசிரியன் ( 7 வயது). இவர்களது உறவினர்கள் கேரளாவில் உள்ள கோவிலுக்கு செல்வதற்காக புறப்பட்டனர். அவர்களை வழி அனுப்பி வைப்பதற்காக தர்மபுரி ரயில் நிலையத்துக்கு அனைவரும் சென்றனர். அங்கு, பெங்களூரு- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் உறவினர்கள் ஏறிய நிலையில், முனியப்பன் மற்றும் அவரது மகன் யாசிரியனும் ஏறினர். பின்னர், ரயில் புறப்பட்ட நிலையில், முனியப்பன் தனது மகனை தூக்கிக்கொண்டு ரயிலில் இருந்து இறங்க முயன்றார். அப்போது, எதிர்பாராத விதமாக முனியப்பனின் கால் இடறி கீழே விழுந்தார். இதில், முனியப்பன் மற்றும் அவரது மகன் யாசிரியன் ரயிலுக்கும், நடைமேடைக்கும் நடுவே சிக்கி கொண்டனர். இதை பார்த்த, அவரது உறவினர்கள் மற்றும் பயணிகள் அலறல் சத்தம் போட்டனர்.
உடல் துண்டாகி உயிரிழந்த சிறுவன்
இந்த சத்தத்தை கேட்டு ரயில் இன்ஜின் ஓட்டுநர் மற்றும் ரயில் கார்டு ஆகியோர் ரயிலை உடனடியாக நிறுத்தினர். ஆனால், சிறிது தூரம் ரயில் நகர்ந்து சென்றதால், ரயிலின் சக்கரத்தில் சிறுவன் யாசிரியன் சிக்கி உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். முனியப்பன் ரயிலுக்கும், நடைமேடைக்கும் இடையே சிக்கி கொண்ட நிலையில், அவரை போலீசார் மற்றும் பொதுமக்கள் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க: சிவகாசி அருகே சோகம்.. திடீரென அதிர்ந்த பட்டாசு ஆலை.. ஒரே நேரத்தில் பறிபோன 3 உயிர்கள்!




தீவிர சிகிச்சை பிரிவில் சிறுவனின் தந்தை
சிறிது நேரம் போராட்டத்திற்கு பின்னர் அவர் மீட்கப்பட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக கோயம்புத்தூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ரயிலின் சக்கரத்தில் சிக்கி உடல் துண்டாகி பலியான சிறுவன் யாசிரியனின் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனை செய்வதற்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, முனியப்பனின் உறவினர்கள் ரயில்வே இருப்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு
அந்த புகாரின் பேரில், ரயில்வே இருப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தர்மபுரியில் உறவினர்களை வழி அனுப்பதற்காக வந்த தந்தை மற்றும் மகன் ஓடும் ரயிலில் இருந்து இறங்கி தவறி விழுந்த சம்பவமும், சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடூர விபத்து தொடர்பான கண்காணிப்பு கேமரா வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
மேலும் படிக்க: தருமபுரியில் சட்டவிரோத பாலின கண்டறிதல்- கருக்கலைப்பு.. செவிலியர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!