AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

திமுகவில் அதிரடி மறுசீரமைப்பு.. 10 மாவட்ட செயலாளர்கள் மாற்றப் பட வாய்ப்பு?

DMK party restructuring: திமுக மறுசீரமைப்புக் குழு அளித்த முதற்கட்ட அறிக்கையின் அடிப்படையில் கட்சியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. சுமார் 10 மாவட்ட செயலாளர்கள் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படலாம் என்றும், மாவட்டங்களின் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்தி இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அதிக வாய்ப்பு வழங்க திமுக தலைமை தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திமுகவில் அதிரடி மறுசீரமைப்பு.. 10 மாவட்ட செயலாளர்கள் மாற்றப் பட வாய்ப்பு?
கோப்புப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 14 Aug 2026 13:02 PM IST

சென்னை, ஆகஸ்ட் 14: கடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தற்போதைய காலச் சூழலுக்கு ஏற்ற வகையிலும், எதிர்வரும் தேர்தல் மற்றும் அரசியல் களம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும் கட்சியை மறுசீரமைப்பு செய்ய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதற்காக அமைக்கப்பட்ட 10 பேர் கொண்ட உயர்மட்ட மறுசீரமைப்புக் குழு, கட்சியினுடைய அமைப்பு ரீதியான மாற்றங்கள் மற்றும் நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வந்தது. இக்குழுவிற்கு கூடுதலாக அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது முதற்கட்ட அறிக்கையை திமுக தலைவரிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கையின் பரிந்துரைகளின் அடிப்படையில் திமுகவில் மாவட்ட ரீதியாகவும் மாநில அளவிலும் அதிரடியான மறுசீரமைப்பு நடவடிக்கைகள் தொடங்கவுள்ளன.

இதையும் படிக்க: முழு பயிர்க்கடன் தள்ளுபடி கோரி அதிமுக ஆர்ப்பாட்டம்.. தஞ்சாவூரில் ஆவேசமாக வெடித்த இபிஎஸ்!!

மாவட்ட செயலாளர்கள் நீக்கமும் புதிய பரிந்துரைகளும்:

மறுசீரமைப்புக் குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையில், போதுமான செயல்பாடுகள் இல்லாமல் இருக்கும் மாவட்ட செயலாளர்களைப் பொறுப்பிலிருந்து மாற்ற வேண்டும் என முதன்மையான பரிந்துரை முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரே மாவட்ட செயலாளரின் கட்டுப்பாட்டில் அதிக அளவிலான தொகுதிகள் இருக்கும் பட்சத்தில், அந்தப் சுமையைக் குறைத்து நிர்வாக வசதிக்காகப் புதிய மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், செயல்பாடற்ற அல்லது வயதான மூத்த மாவட்ட செயலாளர்கள் சுமார் 10 பேர் வரை தங்களது பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படலாம் என தெரிகிறது. அதேநேரத்தில், மூத்த நிர்வாகிகளுக்குக் கட்சியினுடைய மாநில அளவிலான முக்கிய பொறுப்புகள் வழங்கி கவுரவிக்கப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு முன்னுரிமை:

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது இல்லத்தில் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், கட்சி நிர்வாகத்தில் புதிய இரத்தத்தைப் பாய்ச்சும் வகையில் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்புகளை வழங்குவது குறித்து விரிவாகப் பரிசீலித்துள்ளார். இதற்கேற்ப கட்சி மாவட்டங்களின் எண்ணிக்கையை 100 ஆக உயர்த்துவது குறித்தும், புதிய மாவட்ட செயலாளர்களாகப் பல திறமையான இளைஞர்கள் மற்றும் பெண் நிர்வாகிகளை நியமிப்பது குறித்தும் தீவிரமாக விவாதிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு ரீதியான மாற்றங்கள் மூலம் அடிமட்ட அளவில் கட்சியை மேலும் பலப்படுத்தவும், அனைத்துப் பிரிவினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் வழங்கவும் திமுக தலைமை முடிவெடுத்துள்ளது.

இதையும் படிக்க: அதிமுக அதிருப்தியாளர்கள் அணியில் பிளவு?.. எஸ்.பி.வேலுமணி முடிவை எதிர்த்து இபிஎஸ் போராட்டத்தில் தங்கமணி பங்கேற்பு!!

விரைவில் வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு:

திமுக மறுசீரமைப்புக் குழுவின் பரிந்துரைகளை ஏற்று, புதிய மாவட்ட செயலாளர்கள் நியமனம் மற்றும் மாற்றங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் ஓரிரு நாட்களில் வெளியாகக்கூடும் என அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாவட்ட செயலாளர்கள் பொறுப்பில் நடக்கும் இந்த மாற்றங்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் களம் சூடுபிடித்துவரும் நிலையில், திமுகவில் மேற்கொள்ளப்படும் இந்த அதிரடி மறுசீரமைப்பு நடவடிக்கை தமிழக அரசியலில் முக்கியமான திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.

Follow Us