நெடுஞ்சாலைத்துறை முறைகேடு வழக்கு.. எ.வ.வேலு மீது நோ ஆக்சன்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Former Minister E. V. Velu Case : முன்னாள் அமைச்சர் எ. வ. வேலு மீதான நெடுஞ்சாலைத்துறை முறைகேடு வழக்கில் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது .
தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சி காலத்தில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராக இருந்தவர் எ.வ. வேலு. இவர், மீது நெடுஞ்சாலை துறையில் முறைகேடு நிகழ்ந்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் எ. வ. வேலுவுக்கு எதிராக உயர்நீதிமன்றம் லுக் அவுட் நோட்டிஸ் பிறப்பித்திருந்தது. இந்த நிலையில், தன் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரியும், லுக் அவுட் நோட்டீசை ரத்து செய்ய கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் எ. வ. வேலு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று ஆகஸ்ட் 14- ஆம் தேதி நடைபெற்றது. இதில், எ. வ. வேலு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், எ.வ. வேலு விசாரணைக்கு ஒத்துழைத்து வரும் நிலையில், அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை பிறப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.
எ.வ.வேலு மீது கடும் நடவடிக்கை கூடாது
எனவே, அதனை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார். இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் எ. வ. வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீசை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், வழக்கு நிலுவையில் இருந்து வருவதால், எ. வ. வேலு வெளிநாடு செல்ல விரும்பினால், கீழமை நீதிமன்றத்தில் அனுமதி பெற வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. அதே வேளையில், எ. வ. வேலுவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என்று ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை ஆகஸ்ட் 21- ஆம் தேதி வரை நீட்டித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்க: பிரம்மாண்டமாக உருவாகிறது முதல்வரின் புதிய அலுவலகம்.. ரூ. 5.5 கோடியில் டெண்டர் கோரிய பொதுப் பணித் துறை!




லஞ்ச ஒழிப்பு துறை பதிலளிக்க அவகாசம்
இந்த வழக்கில் கடந்த ஜூலை மாதம் 28- ஆம் தேதி விசாரணை நடைபெற்றது. அப்போது, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு துறை சார்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் இந்த வழக்கு தொடர்பாக விரிவான பதில் அளிப்பதற்கு கால அவகாசம் வேண்டும் என்று கேட்டிருந்தார். இதனை ஏற்ற நீதிபதி ஆகஸ்ட் 14- ஆம் தேதியான இன்று வரை லஞ்ச ஒழிப்பு துறை பதிலளிக்க கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
ஆகஸ்ட் 21- இல் மீண்டும் வழக்கு விசாரணை
இந்த அவகாசம், முடிவடைந்த நிலையில் நீதிபதி மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளார். அத்துடன், அவர் மீதான கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவும் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் அதனையும் ஆகஸ்ட் 21- ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: தமிழகத்தில் குவியும் தென்மாநில முதல்வர்கள்.. அமித் ஷா தலைமையில் மாபெரும் மாநாடு.. தேதி குறித்த மத்திய அரசு!