சீருடையில் மது அருந்திய பள்ளி மாணவிகள்.. தலைமை ஆசிரியை மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை.. கன்னியாகுமரியில் பரபரப்பு!
Kanyakumari Headmistress Transferred : கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சீருடையில் மது அருந்திய சம்பவத்தில் தக்கலை பள்ளி தலைமை ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் பிரின்ஸ் ஆரோக்கிய சாமி பிறப்பித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், கடந்த ஆகஸ்ட் 1- ஆம் தேதி நீட் உள்ளிட்ட தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. இந்த பயிற்சி வகுப்பில் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்த பயிற்சி வகுப்புகள் முடிந்த பின்னர் மாணவிகள் ஒரு குழுவாக அமர்ந்து பள்ளியில் மது அருந்தி உள்ளனர். இதனை சக மாணவி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இது குறித்து, தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் பிரதாப் உடனடியாக விசாரணை நடத்துமாறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் மற்றும் போலீசார் தக்கலை அரசு மேல்நிலை பள்ளிக்கு நேரில் சென்று சம்பந்தப்பட்ட மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
தக்கலை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மாற்றம்
இதில், மாணவிகளுக்கு மது வாங்கி கொடுத்தது யார். இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பன உள்ளிட்ட கோணங்களில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்த பிரமிளா இவாஞ்சலின் நாகர்கோவிலில் உள்ள வடசேரி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதே போல, வடசேரி பள்ளியின் தலைமை ஆசிரியர் ஸ்டாலின், தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க: தவெகவுக்கு மட்டும் அனுமதியா? கோவை என்ன பாகிஸ்தானா? நீதிமன்றம் கேள்வி




மாணவிகள் மது அருந்தும் வீடியோ வைரல்
இதற்கான உத்தரவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ் பிறப்பித்துள்ளார். மேலும், இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. அரசு பள்ளி மாணவிகள் மது அருந்தும் வீடியோ காட்சியில், ஆண் நண்பர் ஒருவர் டாஸ்மாக் கடையிலிருந்து மது வாங்கி வந்து கொடுத்ததாக மாணவிகள் பேசும் உரையாடல் பதிவாகி உள்ளது. அத்துடன், வெளியில் இருந்து உணவு வாங்கி வந்து மது அருந்திக் கொண்டே உணவு அருந்தியது போன்ற காட்சிகளும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு
ஏற்கனவே, அரசு பள்ளியில் பயிலும் மாணவிகள் சிலர் பள்ளி சீருடையில் மது அருந்துவது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி இருந்தன. தற்போது, கன்னியாகுமரி மாவட்டத்தில் மீண்டும் இது போன்ற ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த விவகாரம் கல்வித்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மேலும், மாணவ, மாணவிகளுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மேலும் படிக்க: நெடுஞ்சாலைத்துறை முறைகேடு வழக்கு.. எ.வ.வேலு மீது நோ ஆக்சன்.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!