“தமிழ்நாட்டில் இனி திமுக கூட்டணி இல்லை”.. ஸ்டாலின், இபிஎஸ் கூறியது தவறு.. விளாசிய சிபிஎம் சண்முகம்!
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு புதிய கட்சி, மூன்று மாதங்கள் கூட தாங்காது என்று விமர்சிப்பது தவறானது. மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி என யார் அப்படிப் பேசினாலும் அது தவறு என்று கண்டித்த அவர், ஒரு புதிய அரசு தங்களது வாக்குறுதிகள் அனைத்தையும் உடனே நிறைவேற்றிவிட முடியாது என்றும் கூறினார்.
புதுக்கோட்டை, ஜுன் 08: தமிழ்நாட்டில் தற்போது ‘திமுக கூட்டணி’ அல்லது ‘மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி’ என்ற ஒன்று இல்லை என்றும், தமிழக வெற்றிக் கழகத்திற்கு வெளியிலிருந்து ஆதரவளிப்பது என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) சுயேச்சையான முடிவு என்றும் அக்கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து புதுக்கோட்டையில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசிய முக்கிய விவரங்கள் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.
இதையும் படிக்க : திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா?.. ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸின் முக்கிய அறிவிப்பு.. அரசியல் களத்தில் பரபரப்பு!
தமிழக வெற்றிக் கழகத்திற்கு அளித்துள்ள ஆதரவு நிலைப்பாடு என்பது கட்சியின் மாநிலக் குழு கூடி எடுத்த சுயேச்சையான முடிவு ஆகும். இது யாருடைய தூண்டுதலாலோ அல்லது ஒப்புதலாலோ எடுக்கப்பட்ட முடிவு அல்ல என்றும், தங்களது முடிவை வேறு எந்தக் கட்சியிடமும் கேட்டு எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் மீண்டும் தெளிவுபடுத்தினார்.
தமிழ்நாட்டில் திமுக கூட்டணி இல்லை:
செய்தியாளர்கள் “தற்போது திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இல்லையா?” என்று எழுப்பிய கேள்விக்கு, “தமிழ்நாட்டில் திமுக கூட்டணி மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என்ற ஒன்று தற்போது இல்லை” என்று வெளிப்படையாக அறிவித்தார்.
இருப்பினும், தமிழ்நாட்டின் நலன், மாநில உரிமைகள் மற்றும் மதச்சார்பின்மை போன்ற ஒத்த கருத்துடைய பொதுவான பிரச்சினைகளுக்காக திமுகவுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடும் என்ற தங்களின் நிலைப்பாட்டில் தற்போதும் உறுதியாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமிக்கு கண்டனம்:
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு புதிய கட்சி, மூன்று மாதங்கள் கூட தாங்காது என்று விமர்சிப்பது தவறானது. மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி என யார் அப்படிப் பேசினாலும் அது தவறு என்று கண்டித்த அவர், ஒரு புதிய அரசு தங்களது வாக்குறுதிகள் அனைத்தையும் உடனே நிறைவேற்றிவிட முடியாது என்றும், அதற்கு ஐந்து ஆண்டுகள் வரை கால அவகாசம் உள்ளது என்றும் கூறினார்.
அரசியல் சூழலும் பொறுப்புள்ள முடிவும்:
தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாலேயே இந்த ஆதரவு முடிவு எடுக்கப்பட்டது. ஆட்சி அமையாவிட்டால் பரவாயில்லை என்று ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சி சும்மா இருந்துவிட முடியாது. அன்றைய அரசியல் சூழலில் குடியரசுத் தலைவர் ஆட்சி வருவதைத் தடுத்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு அமைவதே முக்கியம் என்ற நோக்கில் இந்தச் சரியான முடிவு எடுக்கப்பட்டதாக அவர் விளக்கினார்.
இதையும் படிக்க : “பாஜகவின் ஒரே முகம் தாமரைதான்”.. அண்ணாமலை விவகாரத்தில் தமிழிசை சௌந்தரராஜன் ஆவேசம்!
மேலும், செய்தியாளர் கூறிய ‘தவெக அலை’ என்ற கூற்றை மறுத்த அவர், “இது அலையாக இருந்திருந்தால் அவர்கள் 118 என்ற பெரும்பான்மை இடங்களை எட்டியிருப்பார்கள்” என்று சுட்டிக்காட்டினார். அத்துடன், அதிமுகவின் வீழ்ச்சிக்கு பாஜக தான் முழு காரணம் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.