10 நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வர வேண்டும்… தாமதமானால் ரூ.10,000 அபராதம்
Highway Ambulance Response Rule : தேசிய நெடுஞ்சாலைகளில் 10 கிலோ மீட்டர் சுற்றளவில் நடைபெறும் விபத்துகளுக்கு தகவல் கிடைத்த 10 நிமிடங்களுக்குள் சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ் செல்ல வேண்டும் எனவும் இல்லை என்றால் 10,000 அபராதம் விதிக்கப்படும் எனவும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக மருத்துவ உதவி கிடைப்பதை உறுதி செய்ய, தேசிய நெடுஞ்சாலைஆணையம் புதிய விதிகளை அறிவித்துள்ளது. அதன்படி 10 கிலோ மீட்டர் சுற்றளவில் நடைபெறும் விபத்துகளுக்கு தகவல் கிடைத்த 10 நிமிடங்களுக்குள் சம்பவ இடத்துக்கு ஆம்புலன்ஸ் செல்ல வேண்டும் இல்லை என்றால் 10,000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் விபத்து குறித்து தகவல் கிடைத்த ஒரு மணி நேரத்திற்குள் பாதிக்கப்பட்டவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்றும் என்எச்ஏஐ அறிவித்துள்ளது. ஒருவேளை தாமதம் ஏற்பட்டால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை 10 கிலோ மீட்டருக்கு மேல் தொலைவில் விபத்து ஏற்பட்டிருந்தால், சம்பவ இடத்துக்கான தூரத்திற்கு ஏற்பட ஆம்புலன்ஸ் செல்வதற்கான நேரம் அதிகரிக்கப்படும் என என்எச்ஏஐ தெரிவித்துள்ளது.
ஆம்புலன்ஸ் குறிப்பிட்ட நேரத்திற்குள் சம்பவ இடத்திற்கு சென்றதா என்பதை ஜிபிஎஸ் தகவல்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட தொழில்நுட்பங்களின் உதவியுடன் சரிபார்க்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




இதையும் படிக்க : வடிவேலு ஸ்டைலில்… திருட வந்த இடத்தில் துணி துவைத்து குளித்து ஜாலியாக இருந்த திருடன் – வைரலாகும் சிசிடிவி காட்சிகள்
அவசர அழைப்பை நிராகரித்தாலும் அபராதம்
மேலும், விபத்து குறித்து உடனடியாக வரும் அவசர அழைப்புகளை நிராகரித்தாலும் ரூ.10, 000 அபராதம் விதிக்கப்படும் என அறிவித்துள்ளது. மேலும் ஆம்புலன்ஸ் ஒப்பந்த விதிகளின் படி ஆம்புலன்ஸில் இருக்க வேண்டிய மருத்துவ உபகரணங்கள், மருந்துகள், மற்றும் மருத்துவ பணியாளர்கள் கண்டிப்பாக ஆம்புலன்ஸில் இருக்க வேண்டும் என்றும் ஆய்வின்போது அதில் ஏதோ ஒன்று குறைந்தாலும் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் கிட்டத்தட்ட 3000 ஆம்புலன்ஸ்கள் இயங்கி வருகின்றன என்றும் 1000 கண்காணிப்பு வாகனங்களும், பணியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த வாகனங்களிலும் இணைய வசதியுடன் கூடிய ஆண்ட்ராய்டு டிவைஸும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்களின் செயல்பாடுகளை கண்காணிக்க ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
இதையும் படிக்க : “காவிரியில் நீர் திறக்க எதிர்ப்பு!”.. கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் போராட்டம்.. வாட்டாள் நாகராஜ் கைது, எல்லை நிலவரம் என்ன?
தேசிய நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துகள் போன்ற அவசர காலகட்டங்களில் தகவல் தெரிவிக்க மத்திய அரசு 1033 என்ற உதவி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது. விபத்தில் சிக்கியவர்களை மீட்பதில் உள்ள தாமதம் குறித்து நீதிமன்றம் ஏற்கனவே கவலை தெரிவித்திருந்தது. இந்த நிலையில் விபத்தில் சிக்கியவர்களுக்கு விரைவாக மருத்துவ உதவி கிடைப்பதை உறுதி செய்ய புதிய காலக்கெடு மற்றும் அபராத விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. இது விபத்தில் சிக்கியவர்களுக்கு உடனடியாக மருத்துவ உதவிகள் கிடைப்பதை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.