“காவிரியில் நீர் திறக்க எதிர்ப்பு!”.. கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் போராட்டம்.. வாட்டாள் நாகராஜ் கைது, எல்லை நிலவரம் என்ன?
Karnataka Bandh Over Cauvery Water Release: தமிழ்நாட்டிற்குக் காவிரியில் நீர் திறக்கக் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டதற்குக் எதிர்ப்பு தெரிவித்துக் கன்னட அமைப்புகள் சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தின் போது, வாட்டாள் நாகராஜ் கைது செய்யப்பட்டார். மாநில எல்லையான அத்திப்பள்ளியில் கடைகள் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டாலும், பேருந்து போக்குவரத்து வழக்கம் போல் இயங்கியது.
கர்நாடகா, ஆகஸ்ட் 13: காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு உரியத் தண்ணீரைத் திறந்து விடுமாறு காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு கர்நாடக அரசிற்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், நிலவும் நீர் பற்றாக்குறையைக் சுட்டிக்காட்டி இந்த உத்தரவிற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் கன்னட அமைப்புகள், மாநிலம் தழுவிய போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தன. இதன் தொடர்ச்சியாக, கன்னட சளுவளி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கர்நாடக பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தின் பின்னணி, பெங்களூரு மற்றும் எல்லைப் பகுதிகளில் நிலவிய சூழல் மற்றும் காவல் துறையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இக்கட்டுரையில் காணலாம்.
இதையும் படிக்க: “ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிரடி திருப்பம்!”.. சிறையில் காவல் ஆய்வாளர்.. சிபிஐ புதிய வழக்கு பதிவு!
பந்த் அழைப்பும் பல்வேறு அமைப்புகளின் நிலைப்பாடும்:
வாட்டாள் நாகராஜ் கர்நாடக பந்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் சங்கங்கள், அரசுப் பேருந்து கழகங்கள், தனியார் பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இந்த பந்த் போராட்டத்திற்கு நேரடியாக ஆதரவு தெரிவிக்கவில்லை என முன்னதாகவே அறிவித்திருந்தன. இதனால் மாநிலம் முழுவதும் முழுமையான பந்த் அடைப்பு ஏற்படாவிட்டாலும், பெங்களூரு, மைசூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் காலி குடங்களை ஏந்திச் சாலை மறியலில் ஈடுபடுவது, இருசக்கர வாகனப் பேரணிகள் நடத்துவது எனப் பல்வேறு தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. குறிப்பாக கே.ஆர்.எஸ் அணை அமைந்துள்ள மண்டியா மாவட்டத்தில் மட்டுமே பெரும்பாலான வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு முழு அடைப்பு போன்ற சூழல் காணப்பட்டது.
வாட்டாள் நாகராஜ் கைது:
போராட்டத்தை தீவிரப்படுத்தும் நோக்கில், பெங்களூரு மெஜஸ்டிக் பகுதியில் அரசுப் பேருந்து ஊழியர்களிடம் ஆதரவு திரட்டவும், டவுன் ஹால் பகுதியிலிருந்து ஃப்ரீடம் பார்க் வரை பேரணியாகச் செல்லவும் வாட்டாள் நாகராஜ் திட்டமிட்டிருந்தார். அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு, பெங்களூரு சதாசிவ் நகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தின் முன் காலை முதலே காவல் துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர். அவர் வீட்டிலிருந்து வெளியே வந்தபோதே காவல் துறையினர் அவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், நகரின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட அமைப்பினரையும் போலீசார் கைது செய்து நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இதையும் படிக்க: “எனக்கு கிடைக்காதவள் எவனுக்கும் கிடைக்கக்கூடாது” திருப்பூர் தாய்- மகள் இரட்டை கொலை.. கைதான காதலன் பரபரப்பு வாக்குமூலம்!
மாநில எல்லை அத்திப்பள்ளி நிலவரம்:
தமிழ்நாடு – கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி பகுதியில் இந்த போராட்டத்தின் தாக்கம் ஓரளவு பிரதிபலித்தது. அப்பகுதியில் உள்ள உணவகங்கள், தேநீர் கடைகள் மற்றும் பேக்கரிகள் என நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுப் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. இருப்பினும், மக்களின் இயல்பு வாழ்க்கையும் பேருந்து போக்குவரத்தும் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை. ஓசூர் வழியாகத் தமிழ்நாட்டிலிருந்து பெங்களூரு செல்லும் நாள்தோறும் இயக்கப்படும் சுமார் 300-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகளும், கர்நாடகாவிலிருந்து தமிழ்நாட்டிற்கு வரும் பேருந்துகளும் எவ்வித இடையூறுகளுமின்றி வழக்கம் போல் இயங்கின. அசம்பாவிதங்களைத் தடுக்க எல்லைப் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.