பச்சிளம் குழந்தை முதல் பல் விழுந்த பாட்டி வரை பாதுகாப்பில்லை.. ஈரோடு மூதாட்டி பாலியல் வன்கொடுமைக்கு நயினார் கண்டனம்!
Erode Elderly Woman Harassment: ஈரோட்டில் மூதாட்டியை தாக்கி இரு போதை இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், குழந்தை முதல் மூதாட்டி வரை பாதுகாப்பில்லை என்று தவெக அரசை நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம், பவானி பகுதியை சேர்ந்தவர் 74 வயதான மூதாட்டி. இவர், தனது வீட்டில் தனியாக வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மூதாட்டி அந்த பகுதியில் நடந்து சென்ற போது, மது போதையில் வந்த இரு இளைஞர்கள் திடீரென அந்த மூதாட்டியை கையை பிடித்து இழுத்து தாக்கியதுடன், பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனால், அச்சம் அடைந்த அந்த மூதாட்டி சத்தம் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வருவதற்குள் அந்த இரு இளைஞர்களும் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இது தொடர்பாக அந்த பகுதி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், மூதாட்டிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மூதாட்டி பாலியல் வன்கொடுமை மனதை பதைபதைக்க செய்கிறது
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டத்தில் 74 வயது மதிக்கத்தக்க மூதாட்டியை மது போதையில் இரு இளைஞர்கள் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியான செய்தி மனதை பதைபதைக்க செய்கிறது. கடந்த திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் பலனாக தமிழகத்தின் மூலை, முடுக்கு எங்கும் சாராயம், போதை பொருட்கள் வேர் விட்டு பரவி உள்ளது.
மேலும் படிக்க: மதுரை – சிவகங்கை மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம்.. தமிழக அரசு அதிரடி!




பச்சிளம் குழந்தை முதல் பல் விழுந்த பாட்டி வரை பாதுகாப்பில்லை
தற்போதைய தமிழக வெற்றிக் கழக தலைவர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசின் மெத்தனத்தால் பச்சிளம் குழந்தை முதல் பல் விழுந்த மூதாட்டி வரை அனைவரின் பாதுகாப்பும் சூறையாடப்பட்டு வருகிறது. தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது தூய சக்தி என்றும் முழங்கிய விஜய், ஆட்சி அமைத்ததும் மௌன விரதம் இருந்து மகளிர் பாதுகாப்பை பறிப்பது தான் மாற்றமா முதல்வர் விஜய் அவர்களே.
சினிமா வசனம் பேசுவதை நிறுத்த வேண்டும்
மனம் குமுறுகிறது. கண்கள் கலங்குகிறது என இனியும் சினிமா வசனம் பேசாமல், தமிழக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தீவிரமாக செயல்படுங்கள் என்று அந்த அறிக்கையில் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்று வரும் பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மேலும் படிக்க: தூத்துக்குடியில் பயங்கரம்.. வடமாநில தொழிலாளி கொடூரமாக அடித்து கொலை.. 4 பேரை தட்டி தூக்கிய போலீஸ்!