பெண்ணிடம் அத்துமீறிய தவெக நிர்வாகி கைது.. சட்டம் ஒழுங்கு எங்கே? நயினார் நாகேந்திரன் கொந்தளிப்பு!
Tiruvarur TVK Offical Arrest : திருவாரூர் மாவட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி உள்பட இருவர் 22 வயது இளம் பெண்ணிடம் அத்து மீறிய சம்பவத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் 22 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் பேருந்தில் இருந்து இறங்கி தனது தந்தையின் வருகைக்காக காத்திருந்தார். அந்த பெண்ணிடம் திருத்துறைப்பூண்டி தமிழக வெற்றிக் கழக வடக்கு ஒன்றிய செயலாளர் ஆனந்த் என்கிற ஆனந்தராஜ் மற்றும் அவரது நண்பர் அசோக் ஆகிய இருவரும் இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண், சிறிது நேரத்தில் அங்கு வந்த அவரது தந்தையிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதனை, அந்த பெண்ணின் தந்தை தட்டி கேட்டுள்ளார். மேலும், ஆனந்தின் பைக் சாவியை எடுத்துக் கொண்டு அந்த இளம் பெண்ணின் தந்தை திருவாரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் சம்பந்தப்பட்ட இருவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதில், புகார் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகி ஆனந்த் மற்றும் அவரது நண்பர் அசோக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்து நீக்கம்
இந்த சம்பவத்தை தொடர்ந்து திருவாரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ஆனந்த் என்ற ஆனந்தராஜ் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக மாவட்ட செயலாளர் அறிவிப்பு வெளியிட்டார். இந்த நிலையில், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: திருவாரூரில் 22 வயது இளம் பெண்ணை தமிழக வெற்றி கழக நிர்வாகி உள்பட இருவர் ஆபாசமாக இரட்டை அர்த்தத்தில் கேலி கிண்டல் செய்துள்ளனர்.
மேலும் படிக்க: ஆளுநர் உரையில் தவெக அரசின் வாக்குறுதிகள் நிறைவேற்றுவதற்கான உத்தரவாதம் இல்லை.. டிடிவி தினகரன் விமர்சனம்!




தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பலவீனம்
இந்த சம்பவம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு பலவீனம் அடைந்துள்ளது என்பதற்கு சான்றாக உள்ளது. பகல் நேரத்திலேயே பேருந்து நிலையம் போன்ற பொது இடங்களில் பெண்ணுக்கு இது போன்ற அவமரியாதை நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பான செய்திகள் வெளியான பின்னரே, அந்த நபரை கட்சியிலிருந்து நீக்கி விட்டதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கட்சியில் இருந்து நீக்கினால் மட்டும் தீர்வாக அமையாது.
பெண்களை மதிப்பதை கற்றுக் கொடுக்க வேண்டும்
கட்சியின் கொள்கை முழக்கங்களை மேடைகளில் பேசுவதோடு நிறுத்திக் கொள்ளாமல், தங்களது கட்சி தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் பெண்களை மதிக்கும் அடிப்படை பண்பையும், ஒழுக்கத்தையும் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் கற்றுக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருந்தது ஆளுநர் உரை… தேமுதிக பொதுச்செயலர் பிரேமலதா விஜயகாந்த்!