சென்னை கீழ்ப்பாக்கத்தில் கொடூரம்.. வாய் பேச முடியாத கைதி அடித்துக் கொலை… குற்றப்பின்னணி வார்டில் அதிர்ச்சி!!
Kilpauk Mental Asylum murder: கீழ்ப்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தின் கிரிமினல் வார்டில், வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கைதி ஜாகீர் சக நோயாளியால் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, இவ்விவாகரம் குறித்து விசாரணை நடக்கிறது.
சென்னை, ஜூலை 24: சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் உள்ள குற்றப் பின்னணி கொண்ட கைதிகளுக்கான ‘கிரிமினல் வார்டில்’ நோயாளிகளுக்கிடையே ஏற்பட்ட தகராறில், வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி கைதி ஒருவர் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பாதுகாப்புக் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
மேலும் படிக்க: தூத்துக்குடி லாக்அப் டெத் சம்பவம்? சிசிடிவி ஆதாரத்துடன் காவல் துறை அதிரடி விளக்கம்.. முழு விவரம் என்ன!
யார் இந்த ஜாகீர்? – வழக்கும் பின்னணியும்:
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில், ஜாகீர் (27) என்பவர் கைது செய்யப்பட்டார். வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான ஜாகீருக்கு மனநலமும் பாதிக்கப்பட்டிருந்ததால், நீதிமன்ற உத்தரவின்படி பொள்ளாச்சி கிளைச் சிறையிலிருந்து மாற்றப்பட்டுச் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மனநலக் காப்பகத்தில் உள்ள கிரிமினல் வார்டில் உள்நோயாளியாகச் சேர்க்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வந்தார்.
கழிப்பறையில் நடந்த கொடூரத் தாக்குதல்:
இதே கிரிமினல் வார்டில், தென்காசி மாவட்டம் கரையம் காவல் நிலைய வழக்கின் கீழ் கைதான அரவிந்தசாமி என்ற மனநலம் பாதிக்கப்பட்ட மற்றொரு கைதியும் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஜூலை 20-ஆம் தேதி, கிரிமினல் வார்டில் உள்ள கழிப்பறைப் பகுதியில் ஜாகீருக்கும் அரவிந்தசாமிக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டு மோதலாக மாறியது. ஆத்திரமடைந்த அரவிந்தசாமி, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான ஜாகீரின் வலது கண் மற்றும் முகப் பகுதியில் கைகளாலும் சுவராலும் கொடூரமாகத் தாக்கினார்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு:
ஜாகீரின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த காவலாளிகள் மற்றும் ஊழியர்கள், ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அவரை மீட்டு, உடனடியாகச் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்த ஜாகீர், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீசார் விசாரணை – மருத்துவர் புகார்:
இச்சம்பவம் குறித்து கீழ்ப்பாக்கம் மனநலக் காப்பகப் பெண் மருத்துவர் சுமித்ரா அளித்த அதிகாரப்பூர்வ புகாரின் பேரில், தலைமைச் செயலக காலனி காவல்துறையினர் கொலை வழக்காகப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: மீண்டும் ஒரு லாக்அப் மரணம்? தூத்துக்குடியில் போலீசார் விசாரணையில் இளைஞர் உயிரிழப்பு.. நீதி கேட்டு உறவினர்கள் போராட்டம்!
தாக்குதலில் ஈடுபட்ட அரவிந்தசாமியைக் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வரும் அதேவேளையில், மனநலக் காப்பகக் கிரிமினல் வார்டில் போதுமான பாதுகாப்பாளர்கள் இருந்தார்களா என்பது குறித்தும் மருத்துவத் துறை உயர் அதிகாரிகளும் காவல்துறையினரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.