கரூர் பணி நியமனம் ரத்து விவகாரம்.. மேல்முறையீட்டு மனுக்கள் ஏற்பு.. உச்ச நீதிமன்றத்தில் ஆக.14-ல் விசாரணை!!
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு அரசு வழங்கிய கருணை அடிப்படையிலான அரசு பணி நியமனங்களைச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை உச்ச நீதிமன்றம் வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி விசாரணைக்கு எடுக்கிறது.
கரூர், ஆகஸ்ட் 08: கரூரில் நடைபெற்ற சோகச் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததையடுத்து, அவர்களின் குடும்பங்களுக்கு மனிதநேய அடிப்படையில் தமிழ்நாடு அரசு வழங்கிய அரசுப் பணி நியமன ஆணைகளைச் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்தது. இந்த உத்தரவு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மத்தியிலும் அரசு வட்டாரத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன.
இதையும் படிக்க: நில ஆவண முறைகேடு வழக்கு.. மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி மீது குற்றச்சாட்டுகள் பதிவு!
41 பேர் பலியும் அரசுப் பணி அறிவிப்பும்:
கரூரில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் தமிழ்நாடு முழுவதிலும் பெரும் சோக அலையை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், நிதியுதவியுடன் சேர்த்து, உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் தகுதியுள்ள ஒருவருக்குக் கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதன்படி, உரிய பரிசீலனைகளுக்குப் பிறகு பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த நபர்களுக்கு அரசு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
பணி நியமனங்கள் ரத்து:
தமிழ்நாடு அரசு வழங்கிய பணி நியமன ஆணைகள் விதிமுறைகளுக்குப் புறம்பானவை எனக் கூறி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட தரப்பினர் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இம்மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, கருணை அடிப்படையிலான பணி நியமனங்களை ரத்து செய்து உத்தரவிட்டது. ஏற்கனவே கரூரில் தங்களின் உறவினர்களை இழந்து தவித்து வந்த குடும்பங்களுக்கு, கிடைத்த அரசு வேலையும் பறிபோனது பேரிடியாக அமைந்தது..
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு:
உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உடனடியாக மேல்முறையீட்டு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு: மனிதநேய அடிப்படையில் வழங்கப்பட்ட பணி நியமனங்களைச் சட்டப்பூர்வமாகப் பாதுகாக்கத் தமிழ்நாடு அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்யப்பட்டது. வேலைவாய்ப்பை இழந்த பாதிக்கப்பட்ட பிரபாகரன், செல்வகுமார் உள்ளிட்ட நபர்கள் சார்பிலும் வழக்கறிஞர்கள் மூலம் தனியாக மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதேவேளையில், உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்டோர், தங்கள் தரப்பு வாதத்தைக் கேட்காமல் இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்கக் கூடாது என்பதற்காக உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.
இதையும் படிக்க: ஆதரிக்கிறீங்களா… எதிர்க்கிறீங்களா?.. முதல்வர் விஜய் கூட்டிய கூட்டத்தைப் புறக்கணித்த திமுக.. திருப்பி அடித்த தவெக!!
ஆகஸ்ட் 14-இல் விசாரணை:
உச்ச நீதிமன்றத்தின் உத்தேச வழக்கு பட்டியலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தமிழ்நாடு அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி விசாரணைக்கு இடம்பெற்றுள்ளன. அன்று நடைபெறும் விசாரணையின் போது, தமிழ்நாடு அரசு மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தரப்பு வழக்கறிஞர்கள் தங்களது வாதங்களை முன்வைப்பார்கள். நாம் தமிழர் கட்சி தரப்பின் கேவியட் மனுவும் சேர்த்து விசாரிக்கப்படும். பணி நியமன ரத்து உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதிக்குமா அல்லது அரசுப் பணிகளை மீண்டும் உறுதி செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.