நீண்ட கால நட்பு… அவர் எனக்களித்தவை – கவிஞர் புவியரசு மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்
கோவையை சேர்ந்த புகழ்பெற்ற கவிஞரும், 2 முறை சாகித்ய அகாடமி விருது வென்றவருமான கவிஞர் புவியரசு உடல் நலக்குறைவு காரணமாக ஜூன் 30, 2026 இன்று காலமானார். அவரது மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் தனது இரங்கல் பதிவில், அவர் எனக்களித்தவை போக தமிழிலக்கியத்துக்கு அளித்தவை ஏராளம் என குறிப்பிட்டுள்ளார்.
கோவையை சேர்ந்த புகழ்பெற்ற கவிஞரும், 2 முறை சாகித்ய அகாடமி விருது வென்றவருமான கவிஞர் புவியரசு உடல் நலக்குறைவு காரணமாக ஜூன் 30, 2026 இன்று காலமானார். அவருக்கு வயது 96. ஜெகநாதன் என்ற இயற்பெயற் கொண்ட கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள பிரஸ் காலனியில் வசித்து வந்தார். முதுமை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக ஓய்வில் இருந்து வந்தார். அடிப்படையில் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்ற புவியரசு, கடந்த 1952 ஆம் ஆண்டு முதல் எழுத்து பணிகளில் ஈடுபட்டு வந்தார். இவரது மறைவுக்கு பிரபல நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கவிஞர் புவியரசு மரணம்
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டைக்கு அருகிலுள்ள லிங்கவநாயக்கன் புதூர் என்ற கிராமத்தில் கடந்த 1931-ம் ஆண்டு பிறந்த இவர், பட்டப்படிப்பை கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரியிலும், தமிழ் பிரிவில் பேரூர் தமிழ்க் கல்லூரியிலும் படித்து பட்டம் பெற்றார். தமிழ்மொழியை ஆட்சி மொழியாக்குவதற்கு நடந்த போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றவர்.




இதையும் படிக்க : அரியலூர் – புதுக்கோட்டையில் லஞ்ச ஒழிப்பு சோதனை.. கட்டுக்கட்டாக சிக்கிய கணக்கில் வராத பணம்.. விசாரணை வளையத்தில் சார்-பதிவாளர்!
வானம்பாடி இலக்கிய இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களில் முதன்மையானவர் இவர். 80க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள இவர் ஷேக்ஸ்பியர், கலீல் ஜிப்ரான், உமர் கய்யாம், ஓஷோ, பியோதர் தஸ்தயேவ்ஸ்கி மற்றும் ரவீந்திரநாத் தாகூர் ஆகியோரின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். மேலும், இவரது சில நூல்கள் ஆங்கிலம், ரஷ்ய, ஹங்கேரி, சிங்களம், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. நவீன நாடகங்களின் முன்னோடியாக உள்ள இவர், பல்வேறு திரைப்படங்களிலும் பங்களிப்பை செய்துள்ளார்.
கமல்ஹாசன் இரங்கல்
கவிஞர் பெருந்தகை புவியரசு மறைந்தார். அவரை நண்பரென்பதா, இலக்கிய வழிகாட்டியென்பதா, ஆசிரியரென்பதா, பழகிய விதத்தால் சகோதரரென்பதா… நீண்ட கால நட்பு எங்களுடையது. என் மனதில் வாழ்வார். அவர் எனக்களித்தவை போக தமிழிலக்கியத்துக்கு அளித்தவை ஏராளம். அவரின் செயல்பாடுகள் நீண்ட காலத்துக்கு…
— Kamal Haasan (@ikamalhaasan) June 30, 2026
வங்க கவிஞர் நஜ்ருல் இஸ்லாமின் தி ரெவலூஷனரி என்ற நூலினை புரட்சிக்காரன் என்ற மொழிபெயர்ப்பு செய்த நிலையில், அந்த நூலுக்காக கடந்த 2007 ஆம் ஆண்டு இவர் சாகித்ய அகாடமி விருது பெற்றார். மேலும், இவரது கவிதைத் தொகுப்பான கையொப்பம் என்ற நூலுக்கு கடந் 2009 ஆம் ஆண்டில் தமிழுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றது. இவர் எழுதிய முக்கூடல் எனும் நூல் தமிழக அரசின் சிறந்த புதுக்கவிதை நூல் என 2004 ஆம் ஆண்டில் பரிசு பெற்றது.
இதையும் படிக்க : எம்எல்ஏக்கள் பிடிக்கும் வேலைகளை முதல்வர் விஜய் சளைக்காமல் செய்து வருகிறார்.. ஆர்.பி. உதயகுமார் கடும் தாக்கு!
இவரது மறைவு குறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது பதிவில், கவிஞர் பெருந்தகை புவியரசு மறைந்தார். அவரை நண்பரென்பதா, இலக்கிய வழிகாட்டியென்பதா, ஆசிரியரென்பதா, பழகிய விதத்தால் சகோதரரென்பதா? நீண்ட கால நட்பு எங்களுடையது. என் மனதில் வாழ்வார். அவர் எனக்களித்தவை போக தமிழிலக்கியத்துக்கு அளித்தவை ஏராளம். அவரின் செயல்பாடுகள் நீண்ட காலத்துக்கு நினைவு கூறப்படும். கவிஞரின் குடும்பத்தாருக்கும், அவர்தம் பிற மாணவர்களுக்கும், என் இதயமார்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.