விழுப்புரம் வாகன ஓட்டிகளே உஷார்.. 5 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்.. காவல்துறை அதிரடி அறிவிப்பு!
Villupuram Traffic Diversion: விழுப்புரம் மாவட்டத்தில் கழிவு நீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற உள்ளதால், குறிப்பிட்ட இடத்தில் இன்று முதல் எதிர் வரும் 5 நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட எஸ். பி. அலுவலகம் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் கழிவு நீர் குழாய் பதிக்கும் பணி நடைபெறுவதால் குறிப்பிட்ட இடத்தில் 5 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், விழுப்புரம் நகரப் பகுதியில் கிழக்கு பாண்டி சாலை ரெட்டியார் ஆலை அருகே நகராட்சி சார்பில் பாதாள சாக்கடை கழிவுநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற உள்ளது. இதன் காரணமாக இன்று திங்கள்கிழமை ( ஜூன் 29- ஆம் தேதி) முதல் எதிர் வரும் 5 நாட்களுக்கு தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, காலை 8 மணி முதல் 10 மணி வரையும், பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரையும் போக்குவரத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு.. முதலமைச்சர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
எந்தெந்த வாகனங்கள் சென்று வர அனுமதி
இதன் காரணமாக, விழுப்புரம் பகுதியில் இருந்து புதுச்சேரி மாநிலத்துக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் வழக்கம் போல சென்று வரலாம். புதுச்சேரி மாநிலத்தில் இருந்து, விழுப்புரம் மாவட்டத்துக்கு இரு சக்கர வாகனம் மற்றும் கார் போன்ற சிறிய கனரக வாகனங்கள் வழக்கம் போல சென்று வரலாம். புதுச்சேரி மாநிலத்தில் இருந்து விழுப்புரம் பேருந்து நிலையம் வரும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் கோலியனூர் சாலை- ஆலங்கால்- பாணாம்பட்டு- ஹவுசிங் போர்டு ( சவிதா திரையரங்கம்) ரயில்வே சந்திப்பு வழியாக செல்லலாம்.




கோலியனூர் டூ ஜானகிபுரம் மெயின் சாலை வழியாக…
இல்லையெனில், கோலியனூர் சாலை- ஆழங்கால்- சுந்தரி பாளையம்- ஜானகிபுரம் மெயின் புதிய புறவழிச்சாலை வழியாக சென்று வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து மாற்றத்துக்கு பொதுமக்கள், வாகன ஓட்டிகள் உள்ளிட்ட பலதரப்பட்ட மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மாவட்ட காவல்துறை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு வழக்கம் போல போக்குவரத்து சீர் செய்யப்படும்.
மேலும் படிக்க: சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை.. எந்த வகுப்பு மாணவர்களுக்கு என்ன மாற்றம்?