AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை.. எந்த வகுப்பு மாணவர்களுக்கு என்ன மாற்றம்?

சிறப்புத் தேவைகள் கொண்ட குழந்தைகள், வெளிநாடுகளில் உள்ள சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பும் மாணவர்களுக்கு இந்த விதிகளில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மாநிலம் மாறி வரும் மாணவர்கள், ஏற்கனவே பயிலும் மொழிகளைத் தொடரலாம். அவர்களுக்கு தேவையான ஆதரவை பள்ளிகள் வழங்க வேண்டும் என்றும் சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது.

சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை.. எந்த வகுப்பு மாணவர்களுக்கு என்ன மாற்றம்?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 29 Jun 2026 19:05 PM IST

ஜூன் 29, 2026: தேசிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக, 2026–27 கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை படிப்படியாக அமல்படுத்தப்படுகிறது. இந்தக் கொள்கையின்படி, மாணவர்கள் மூன்று மொழிகளைப் படிக்க வேண்டும். அவற்றில் குறைந்தபட்சம் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும். மூன்றாவது மொழியாக ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்பானிஷ், அரபி போன்ற வெளிநாட்டு மொழிகளில் ஒன்றை தேர்வு செய்யலாம்.

எந்த வகுப்பு மாணவர்களுக்கு என்ன நடைமுறை?

  • 2026–27 கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு எந்த மாற்றமும் இல்லை. அவர்கள் தற்போது நடைமுறையில் உள்ள இருமொழிக் கல்வி முறையையே தொடர்வார்கள். மூன்றாவது மொழி படிக்க வேண்டிய அவசியம் இருக்காது.
  • 2026–27-ல் 9-ஆம் வகுப்பில் சேரும் மாணவர்கள் மூன்று மொழிகளை கட்டாயமாகப் படிக்க வேண்டும். அதில் குறைந்தபட்சம் இரண்டு இந்திய மொழிகள் இடம்பெற வேண்டும். ஏற்கனவே இரண்டு வெளிநாட்டு மொழிகளைப் படித்து வந்தால், கூடுதலாக ஒரு இந்திய மொழியை சேர்க்க வேண்டும். இந்தக் குழுவினருக்கு மூன்றாவது மொழிக்கான மதிப்பீடு பள்ளி அளவில் மட்டுமே நடைபெறும். 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அந்த மொழிக்கு தேர்வு இருக்காது.
  • 2026–27-ல் 7 மற்றும் 8-ஆம் வகுப்பில் உள்ள மாணவர்களும், மேல்நிலைக்கு செல்லும்போது இதே நடைமுறையை பின்பற்ற வேண்டும். இவர்களுக்கும் மூன்றாவது மொழிக்கான பொதுத்தேர்வு இருக்காது.
  • 2026–27-ல் 6-ஆம் வகுப்பில் சேரும் மாணவர்களே புதிய மும்மொழிக் கொள்கையின் முதல் முழுமையான மாணவர் குழுவாக இருப்பார்கள். இவர்கள் 10-ஆம் வகுப்பு அடையும் போது மூன்றாவது மொழிக்கும் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு எழுத வேண்டும். இதே விதிமுறை அடுத்தடுத்த அனைத்து மாணவர் குழுக்களுக்கும் பொருந்தும்.

விலக்கு அளிக்கப்பட்டவர்கள்:

சிறப்புத் தேவைகள் கொண்ட குழந்தைகள், வெளிநாடுகளில் உள்ள சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து இந்தியா திரும்பும் மாணவர்களுக்கு இந்த விதிகளில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மாநிலம் மாறி வரும் மாணவர்கள், ஏற்கனவே பயிலும் மொழிகளைத் தொடரலாம். அவர்களுக்கு தேவையான ஆதரவை பள்ளிகள் வழங்க வேண்டும் என்றும் சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது.

மேலும் படிக்க: அயோத்தி ராமர் கோவில் நன்கொடை முறைகேடு.. அவசர விசாரணைக்கு உச்சநீதிமன்றம் மறுப்பு

பழைய திட்டம் – புதிய மாற்றம்:

கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிவிப்பில், 2026–27 முதல் 6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கையை தொடங்கி, 2030–31-க்குள் 10-ஆம் வகுப்பு வரை முழுமையாக அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

பின்னர் மே 15-ஆம் தேதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில், 2026–27 கல்வியாண்டில் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் மூன்று மொழிகள் கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. குறைந்தபட்சம் இரண்டு இந்திய மொழிகள் இருக்க வேண்டும் என்றும், புதிய பாடப்புத்தகங்கள் வெளியாகும் வரை 6-ஆம் வகுப்பு மூன்றாவது மொழி (R3) பாடப்புத்தகங்களை இடைக்காலமாக பயன்படுத்தலாம் என்றும் கூறப்பட்டது. இந்த திடீர் மாற்றம் பள்ளிகள் மத்தியில் தயார்நிலை மற்றும் கல்வி நிர்வாகம் தொடர்பான கவலைகளை ஏற்படுத்தியிருந்தது.

Follow Us