பூட்டிய அறை வீடு- சிதறி கிடந்த மாத்திரைகள்.. புதுச்சேரியில் ஜிஎஸ்டி அதிகாரி மர்மமான முறையில் உயிரிழப்பு!
Puducherry GST Official Death : புதுச்சேரி ஜிஎஸ்டி அலுவலகத்தில் கணக்கு அலுவலராக பணி புரிந்து வந்த வெளிமாநிலத்தை சேர்ந்த ஒருவர் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது தொடர்பாக முத்தியலாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர் .
புதுச்சேரி மாநிலத்தில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி ( ஜிஎஸ்டி) ஆணைய அலுவலகத்தில் கொல்கத்தாவை சேர்ந்த ரித்தேஷ் ராஜ்ஷாபி என்பவர் ( 40 வயது) உதவி கணக்கு அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். இவர் முத்தியால்பேட்டை திருவள்ளுவர் நகர் பகுதியில் உள்ள ஜிஎஸ்டி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார். இவரது மனைவி மோனிகா குமாரி மற்றும் குழந்தைகள் கல்கத்தாவில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், சம்பவத்தன்று இரவு மோனிகா தனது கணவர் ரித்தேஷை செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு உள்ளார். ஆனால், அவர் செல்போன் அழைப்பை ஏற்கவில்லை. வெகு நேரமாக தொடர்பு கொண்டு அழைப்பை ஏற்காததால் சந்தேகம் அடைந்த மோனிகா குமாரி தனது கணவருடன் அலுவலகத்தில் பணிபுரியும் மூத்த கணக்காளர் அசோக் குமார் என்பவரை தொடர்பு கொண்டு கணவரை அவரது வீட்டுக்கு சென்று பார்க்குமாறு கூறி உள்ளார்.
வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றபோது…
அதன்படி, மூத்த கணக்கு அலுவலர் அசோக் குமார் மற்றும் ஜிஎஸ்டி இன்ஸ்பெக்டர் பவன் ஆகியோர் ரித்தேஷ் ஷாபி தங்கி இருந்த வீட்டுக்கு சென்று பார்த்தனர். அங்கு, அவரது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை தட்டிப் பார்த்தும் ரித்தேஷ் கதவை திறக்கவில்லை. இதனால், சந்தேகம் அடைந்த அவர்கள் முத்தியால்பேட்டை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றனர்.
மேலும் படிக்க: “கூட்டணிக்காக உரிமைகளை விட்டுக்கொடுக்க முடியாது”.. திமுக மீது திருமாவளவன் கடும் தாக்கு!!




மர்மமான முறையில் இறந்து கிடந்த ஜிஎஸ்டி அதிகாரி
அங்கு, ஜிஎஸ்டி கணக்கு அலுவலர் ரித்தேஷ் ஷாபி மயங்கிய நிலையில் கீழே விழுந்து கிடந்தார். அவரது மூக்கில் நுரை தள்ளி இருந்தது. அவரது அருகே லேப்டாப், செல்போன் மற்றும் சில மாத்திரைகள் ஆகியவை சிதறி கிடந்தன. இதைத் தொடர்ந்து, அவரை போலீசார் மற்றும் ஜிஎஸ்டி அலுவலக ஊழியர்கள் மீட்டு அருகில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, அவரது சடலம் உடல் கூராய்வு செய்வதற்காக கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
முத்தியால்பேட்டை போலீசார் விசாரணை
இந்த சம்பவம் தொடர்பாக முக்கியால்பேட்டை போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அவரது செல்போன் ஆகியவற்றை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். ஜி. எஸ். டி. அலுவலக அதிகாரி மர்மமான முறையில் உயிரிழந்து கடந்த சம்பவத்தில் இதற்கான காரணத்தை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: யூடியூப்பை நம்பிய வீட்டுப் பிரசவம் விபரீதம்… திருப்பூரில் இளம்பெண் உயிரிழப்பு!