பெண்கள் பாதுகாப்பு.. தமிழக காவல் துறையில் கூட்டு நடவடிக்கை குழு அமைப்பு.. குற்றவாளிகளுக்கு கடிவாளம்!
Joint Action Team Formed : தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக தொடர்ந்து அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை கட்டுப்படுத்துவதற்காக சிங்கப் பெண்கள் சிறப்பு அதிரடிப் படையினருடன் இணைந்து செயல்படுவதற்காக காவல் துறையில் கூட்டு நடவடிக்கை குழு உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழக காவல்துறையில் கூடுதல் டிஜிபி அனிதா ஹுசைன் தலைமையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு செயல்பட்டு வருகிறது. இந்த பிரிவுடன் மகளிர் காவல் நிலையங்கள், மனிதர்கள் கடத்தல் பிரிவு, பெண்களுக்கு எதிரான குற்ற புலனாய்வு பிரிவு, சிறுவர்கள் தொடர்பான சிறப்பு பிரிவு மற்றும் குழந்தைகள் நல பிரிவுகள் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக சிங்கப் பெண்கள் சிறப்பு அதிரடிப்படை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த படையின் தலைமை பொறுப்பில் ஐ. ஜி. பவானிஸ்வரி ஐ. பி. எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த சிங்க பெண்கள் சிறப்பு அதிரடிப்படையை முதல்வர் ஜோசப் விஜய் விரைவில் தொடங்கி வைக்க உள்ளார்.
சிங்கப் பெண்கள் சிறப்பு படையுடன் கூட்டு நடவடிக்கை குழு
இந்த நிலையில், சிங்கப் பெண்கள் சிறப்பு அதிரடிப்படை போலீசாரும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு போலீசாரும் இணைந்து பணி புரிவதற்காக கூட்டு நடவடிக்கை குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்காக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்கும் போலீசார் மாநிலம் முழுவதும் ஏற்கனவே ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படையுடன் இணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: திருச்சி செல்லும் முதல்வர் ஜோசப் விஜய்.. விமான நிலையம் முதல் சத்திரம் வரை சாலை வலம்.. நன்றி தெரிவிப்பு கூட்டத்தில் பேச்சு!




காவல் துறையில் கூட்டு நடவடிக்கை குழு உருவாக்கம்
இதற்காகவே கூட்டு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டு அதற்கான கண்காணிப்பு அதிகாரிகளும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன் மூலம், பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பது மற்றும் விரைந்து நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளில் கூட்டு நடவடிக்கை குழு ஈடுபடும். அத்துடன் பாலியல் குற்றச் சம்பவங்களில் விரைவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு விரைவில் அதற்கான நீதி பெற்று தரப்படும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
பிரத்யேக சீருடையுடன் சிங்கப் பெண்கள் சிறப்பு அதிரடிப்படை
தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பெண்கள் போலீசார் கொண்ட சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்திருந்தார். அதன்படி, சிறப்பு அதிகரிப்படை நியமிக்கப்பட்டு சேலம், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்பட்டு வருகிறது. இவர்களுக்குக்கென பிரத்தியேக சீருடை மற்றும் வாகனம் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. சிங்கப்பெண்கள் சிறப்பு அதிரடிப்படையை முதல்வர் விஜய் முறைப்படி விரைவில் தொடங்கி வைக்க உள்ளார்.
மேலும் படிக்க: போர் பதற்றம் எதிரொலி… வணிக சிலிண்டர்களின் விலை மீண்டும் உயர்வு!