மதுராந்தகம்- தாராபுரம் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது.. எம்எல்ஏக்கள் ராஜினாமா கேலிக்கூத்தானது.. உயர்நீதிமன்றம் கருத்து!
Maduranthakam Dharapuram By Election : மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், இந்த விசாரணையை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டது.
தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மக்கள் தீர்ப்பை புறக்கணித்து, அரசியல் லாபத்துக்காக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞர் சுதன் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று புதன்கிழமை ( செப்டம்பர் 16- ஆம் தேதி) நீதிபதிகள் எஸ். எம். சுப்பிரமணியம், கிருஷ்ணசாமி கோவிந்தராஜன் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் எந்த காரணமும் இல்லாமல் குறுகிய காலத்தில் ராஜினாமா செய்ததால் இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் எழுந்துள்ளது.
மனுதாரர் தரப்பில் வைக்கப்பட்ட வாதம்
மீண்டும் தேர்தல் செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எம்எல்ஏக்களை நம்பி வாக்களித்த மக்களின் விரல் மை காய்வதற்கு முன் ராஜினாமா செய்து மற்றொரு தேர்தலை சந்திக்க வைத்துள்ளனர். இதனால் மக்களின் நம்பிக்கை வீழ்த்தப்பட்டுள்ளது. அரசின் சாசனத்தின் படி, இது போன்ற சூழலில் தேர்தல் ஆணையம் முறைப்படுத்தலாம். உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கலாம் என்பதால் இந்த வழக்கில் தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும். அத்துடன் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வாதம் முன்வைக்கப்பட்டது. அப்போது பதிலளித்த நீதிபதிகள், எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முழு உரிமை உள்ளது.
மேலும் படிக்க: Anbil Mahesh Poyyamozhi : அதிகாலையில் பரபரப்பு.. அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டில் குற்ற புலனாய்வு போலீசார் சோதனை!




எம்எல்ஏக்கள் ராஜினாமா கேலிக்கூத்தானது- தேர்தலுக்கு தடை விதிக்கமுடியாது
மக்கள் வாக்கு செலுத்தி தேர்ந்தெடுக்கப்பட்டவர், உரிய காரணங்கள் இல்லாமல் ராஜினாமா செய்ததன் மூலமாக மக்கள் அவமதிக்கப்பட்டுள்ளனர். இது கேலிக்கூத்தாக உள்ளது. இது போன்ற சூழலை எதிர்கொள்ள தேர்தல் ஆணையத்திடம் விதிமுறைகள் ஏதேனும் உள்ளதா. மக்களின் உரிமையை தேர்தல் ஆணையம் பாதுகாக்க வேண்டும். மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதால் அதற்கு தடை விதிக்க முடியாது என்று தெரிவித்தனர்.
தலைமை நீதிபதி அமர்வுக்கு விசாரணை மாற்றம்
மேலும், தேர்தல் ஆணையம் தரப்பில், தற்போது உள்ள சூழல் தொடர்பாக விரிவாக ஆய்வு செய்து பதில் அளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என கோரப்பட்டது. அப்போது, தமிழக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல், தகுதி நீக்கம் செய்யப்பட்டவர் கூட இடைத்தேர்தலில் போட்டியிட முடியும் என சுட்டிக்காட்டினார். ஏற்கனவே எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்றதை எதிர்த்த வழக்கில் தலைமை நீதிபதி அமர்வு தீர்ப்பை தள்ளி வைத்துள்ளது என்று குறிப்பிட்டார். இதை தொடர்ந்து, இந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி விசாரணையை செப்டம்பர் 18- ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
மேலும் படிக்க: தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்குமா? அடுத்தடுத்து தாக்கலாகும் தேர்தல் தடை மனுக்கள்.. பின்னணி என்ன!