திருச்சி அருகே பள்ளியிலேயே அரங்கேறிய கொடுமை.. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர்.. பாய்ந்தது போக்சோ!
Private School Headmaster Arrested : திருச்சி அருகே செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் பயிலும் 4 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் தொடர்பாக பள்ளியின் தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் .
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகே தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சமயபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 500- க்கும் ஏற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக மண்ணச்சநல்லூர் கல்பாளையம் அருகே உள்ள சாஸ்தா நகரை சேர்த்த ஜெயராஜ் ( 55 வயது) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், தலைமை ஆசிரியர் ஜெயராஜ், பள்ளியில் பயிலும் 4 மாணவிகளுக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சி அடைந்த மாணவிகள் இது தொடர்பாக தங்களின் பெற்றோரிடம் அழுது கொண்டே தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த சமயபுரம் காவல் ஆய்வாளர் குணசேகரன், உதவி ஆய்வாளர் முரளி, சிறப்பு உதவி ஆய்வாளர் சுரேஷ் உள்ளிட்ட போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
பள்ளியின் தலைமை ஆசிரியர் கைது
இதில், தலைமை ஆசிரியர் ஜெயராஜ் மற்றும் பிற ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில், தலைமை ஆசிரியர் ஜெயராஜ் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவரை போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து, அவர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து, அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் படிக்க: தோஷம் கழிப்பதாக நிர்வாண பூஜை – கனடா பெண்ணை மிரட்டி பணம் பறித்த ஜோசியர் கைது




பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்
முன்னதாக மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தெரியவந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை ( செப்டம்பர் 3- ஆம் தேதி) அந்தப் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இது தொடர்பாக தலைமை ஆசிரியரிடம் கேட்பதற்காக அவர்கள் பள்ளியின் உள்ளே செல்ல முயன்றனர். ஆனால், பள்ளி நிர்வாகம் பெற்றோர்களை உள்ளே செல்ல அனுமதிக்க வில்லை என்று தெரிகிறது.
சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை
இதனால், மேலும் ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் பின்னர் தான், இந்த சம்பவம் பூதாகரம் ஆன நிலையில், தனியார் பள்ளியின் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக, கல்வித்துறை மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: சிவகங்கையில் சோகம்.. தனியார் பள்ளி பேருந்து மீது மோதிய லாரி.. ஓட்டுநர் கொடூர பலி.. மாணவர்கள் பலத்த காயம்!