மதிய உணவை சாப்பிட்ட 19 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்.. ஊட்டி அரசு பள்ளியில் பரபரப்பு..
உடல்நலம் பாதிக்கப்பட்ட 12 வயதுக்குட்பட்ட மாணவர்கள் ஊட்டியில் உள்ள பழைய அரசு மருத்துவமனையிலும், மற்ற மாணவர்கள் ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மதிய உணவுடன் முட்டை சாப்பிட்டதாகக் கூறப்படும் ஒரு மாணவி உட்பட மொத்தம் 19 மாணவர்களுக்கு தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
செப்டம்பர் 4, 2026: நீலகிரி மாவட்டம் ஊட்டியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 19 மாணவர்களுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக்காலமாக அரசு பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவின் தரம் குறித்து பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. குறிப்பாக, முட்டைகள் அழுகிய நிலையில் இருப்பதாகவும், உணவுகள் தரமற்றதாக வழங்கப்படுவதாகவும் புகார்கள் தெரிவிக்கப்படுகின்றன.
மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்:
இந்த நிலையில், ஊட்டியில் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊட்டி நகரின் மையப்பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். செப்டம்பர் 3ஆம் தேதி பிற்பகல் மாணவர்கள் வழக்கம்போல் பள்ளியில் வழங்கப்பட்ட சத்துணவை சாப்பிட்டுள்ளனர். அப்போது உணவுடன் முட்டையும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்கள்.. கண்டறிய உறவினர்களுக்கு இலவச டிஎன்ஏ சோதனை.. தமிழ்நாடு அரசு ஏற்பாடு!!
மதிய உணவு சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே சில மாணவர்களுக்கு வயிற்றுவலி, வாந்தி மற்றும் மயக்கம் உள்ளிட்ட உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து மாணவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், பள்ளி நிர்வாகம் சார்பில் அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
19 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி:
இதனைத் தொடர்ந்து, உடல்நலம் பாதிக்கப்பட்ட 12 வயதுக்குட்பட்ட மாணவர்கள் ஊட்டியில் உள்ள பழைய அரசு மருத்துவமனையிலும், மற்ற மாணவர்கள் ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
மதிய உணவுடன் முட்டை சாப்பிட்டதாகக் கூறப்படும் ஒரு மாணவி உட்பட மொத்தம் 19 மாணவர்களுக்கு தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: திமுகவில் வெடித்த உட்கட்சி பூசல்.. “மா.செ. தேர்தலைத் தள்ளிப்போடுங்க!”.. மூத்த நிர்வாகிகள் vs கனிமொழி மோதல்!!
காவல் துறையினர் விசாரணை:
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவர்கள் யாரும் ஆபத்தான நிலையில் இல்லை என்றும், அனைவரும் சுயநினைவுடன் நலமாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், மதிய உணவு மற்றும் முட்டை சாப்பிட்ட பின்னரே மாணவர்களுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இதற்கான காரணம் குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், மாணவர்கள் தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.