முன்னறிவிப்பின்றி லைனாக மூடப்படும் டாஸ்மாக் கடைகள்.. அதிரடி நடவடிக்கைக்கு தயாராகும் அரசு.. யார் யார் என லிஸ்ட் எடுக்கும் நிர்வாகம்!!
Unannounced Tasmac Strike: தமிழ்நாட்டில் முன்னறிவிப்பின்றி டாஸ்மாக் கடைகளை அடைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள் மீது தற்காலிக அல்லது நிரந்தரப் பணிநீக்க நடவடிக்கை எடுக்க டாஸ்மாக் நிர்வாகம் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. முதற்கட்டமாகக் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடைகளை மூடிய ஊழியர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது.
செப்டம்பர், 04: தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்குக் கூடுதல் கட்டணம் வசூலிப்பது மற்றும் காலி பாட்டில்களைத் திரும்பப் பெறுவது தொடர்பாக எழுந்த சர்ச்சைகள் கடந்த சில நாட்களாகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இச்சம்பவங்கள் தொடர்பாக ஏற்கெனவே 200-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஊழியர்கள் திடீரென முன்னறிவிப்பின்றி கடைகளை அடைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படித் தன்னிச்சையாகக் கடைகளை மூடிப் பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கத் டாஸ்மாக் நிர்வாகம் தற்போது ஆயத்தமாகி வருகிறது.
இதையும் படிக்க: 16-வது நாளாகத் தொடரும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்.. களத்தில் இறங்கிய அமைச்சர்கள்.. கொடுத்த நேரடி வாக்குறுதி!!
30-க்கும் மேற்பட்ட கடைகள் அடைப்பு:
டாஸ்மாக் ஊழியர்கள் மேற்கொண்டு வரும் இந்தத் திடீர் கடையடைப்புப் போராட்டத்தால் தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட கடைகள் பூட்டப்பட்டுள்ளன. இதனால் நிர்வாக ரீதியாகப் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால், கடைகளை அடைத்த ஊழியர்கள் மீது தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யலாமா அல்லது நிரந்தரமாகவே பணிநீக்கம் செய்யலாமா என்பது குறித்துத் டாஸ்மாக் உயர் அதிகாரிகளும் அமைச்சரும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்டமாகச் சுமார் 136 கடைகளில் பணிபுரியும் ஊழியர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் முன்னறிவிப்பின்றி கடைகளை மூடிய டாஸ்மாக் பணியாளர்கள் மீது முதற்கட்டமாக அதிரடி நடவடிக்கை எடுக்கத் தீவிரம் காட்டப்பட்டு வருகிறது.
அமைச்சரின் உறுதியான பதிவு:
சட்டமன்ற மானியக் கோரிக்கைக்குப் பிறகு டாஸ்மாக் நிர்வாகத்தில் நிலவும் பல்வேறு முறைகேடுகளைக் களைய அரசு பல அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று சமூக வலைதளத்தில் பதிவிட்ட அமைச்சர், “எந்தவிதமான அழுத்தத்திற்கும் நான் பயப்பட மாட்டேன். அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை (MRP) விடக் கூடுதலாகப் பணம் வசூலிப்பவர்கள் மற்றும் முன்னறிவிப்பின்றி கடைகளை மூடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நிச்சயம் தயவுதாட்சணியமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் வெட்டிக்கொலை.. சகோதரர் காவல் நிலையத்தில் சரண்.. புதுக்கோட்டையில் அதிர்ச்சி!
அதிரடி நடவடிக்கையில் டாஸ்மாக் நிர்வாகம்:
அமைச்சரின் இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து, விதிகளை மீறிக் கடைகளை அடைத்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்களின் பட்டியலைத் தயார் செய்யும் பணியில் டாஸ்மாக் அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். தவறு செய்யும் ஊழியர்கள் மீது தயவுதாட்சணியின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்பது இதன் மூலம் தெளிவாகியுள்ளது.