டாஸ்மாக் கடைகளில் ரூ.10 கூடுதல் வசூல்.. ஒரே நாளில் 67 ஊழியர்கள் சஸ்பெண்ட்.. அமைச்சர் அதிரடி!
TASMAC employees suspension: டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களுக்கு எம்.ஆர்.பி விலையை விட கூடுதல் பணம் வசூலித்ததாக வந்த புகார்களைத் தொடர்ந்து, கோவை, மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட மண்டலங்களைச் சேர்ந்த 67 ஊழியர்களை அமைச்சர் விக்னேஷ் ஒரே நாளில் சஸ்பெண்ட் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். கூடுதல் கட்டணம் வசூலித்தால் பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகாரளிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, செப்.03: தமிழ்நாட்டில் அரசு சார்பில் நடத்தப்பட்டு வரும் டாஸ்மாக் மதுக்கடைகளில், மதுபாட்டில்களின் அதிபட்ச சில்லறை விற்பனை விலையான எம்.ஆர்.பி தொகையைக் காட்டிலும் கூடுதலாக 10 ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாகத் தொடர்ச்சியாகப் பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இது தொடர்பான வீடியோக்களும், மதுப்பிரியர்களுக்கும் கடை ஊழியர்களுக்கும் இடையே நடக்கும் வாக்குவாதங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சலசலப்பையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி வந்தன. இந்நிலையில், இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் விக்னேஷ் தீவிர ஆய்வு மேற்கொண்டு, கூடுதல் கட்டணம் வசூலித்த ஊழியர்கள் மீது மிகக் கடுமையான அதிரடி நடவடிக்கையை எடுத்திருக்கிறார்.
மேலும் படிக்க: முதலமைச்சர் விஜய் பெயரில் ஏ.ஐ DeepFake வீடியோ.. வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி சைபர் கிரைம்..
67 ஊழியர்கள் ஒரே நாளில் சஸ்பெண்ட்:
கடந்த சில நாட்களாகவே டாஸ்மாக் கடைகளில் அதிகாரிகள் மற்றும் சிறப்புப் படையினர் மூலம் ரகசிய ஆய்வுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த ஆய்வின் போது, அரசு நிர்ணயித்த விலையை விடக் கூடுதலாகப் பணம் வசூலித்த சில ஊழியர்கள் கையும் களவுமாகப் பிடிபட்டனர். இதனைத் தொடர்ந்து, சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் சேலம் ஆகிய முக்கிய மண்டலங்களுக்கு உட்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணியாற்றி வந்த 67 ஊழியர்களை ஒரே நாளில் சஸ்பெண்ட் செய்து அமைச்சர் விக்னேஷ் உத்தரவிட்டுள்ளார். இந்த அதிரடி நடவடிக்கை டாஸ்மாக் நிர்வாக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடரும் சட்டவிரோத வசூல்:
சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின் போதே டாஸ்மாக் ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு, அவர்களுக்கான சலுகைகளும் நலத்திட்டங்களும் முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளன. அப்படி இருக்கும் போது, மதுபாட்டில்களுக்கு எம்.ஆர்.பி விலையை விட ஒரு ரூபாய் கூட கூடுதலாகப் பெறக் கூடாது என்று அரசுத் தரப்பில் பலமுறை கண்டிப்பான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டும், சில கடைகளில் ரூ.5 முதல் ரூ.10 வரை தொடர்ந்து சட்டவிரோதமாக வசூலிக்கப்பட்டு வந்தது. தற்காலிக இடைநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் மீதான இந்த நடவடிக்கை இத்துடன் முடிவடைந்து விடாது என்றும், தவறுகளில் ஈடுபடும் மற்ற ஊழியர்கள் மீதும் இத்தகைய கண்காணிப்பும் நடவடிக்கைகளும் தொடர்ந்து நீடிக்கும் என்றும் அமைச்சர் தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: 1 வயது குழந்தையின் தொண்டையில் சிக்கிய இரும்பு கம்பி.. அரசு மருத்துவர்கள் செய்த நுட்பமான ஆபரேசன்.. ஈரோட்டில் அதிர்ச்சி சம்பவம்!
உடனடியாகப் புகாரளிக்கலாம்:
அத்துடன், டாஸ்மாக் கடைகளில் இதுபோன்று கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால், மதுப்பிரியர்களும் பொதுமக்களும் அச்சப்படாமல் உடனடியாகப் புகாரளிக்கலாம் என்றும் அரசு சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பொதுமக்கள் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையின் எண்ணைக் குறிப்பிட்டு, அதிகாரப்பூர்வ கட்டணமில்லா தொலைபேசி எண் வாயிலாகத் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம். மேலும், கூடுதல் பணம் கோ கோரும் கடை ஊழியர்களின் செயல்பாடுகளை வீடியோவாகப் பதிவு செய்து, டாஸ்மாக் நிர்வாகத்தின் வாட்ஸ்அப் எண்ணிற்கும் ஆதாரத்துடன் அனுப்பலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.