சிவகங்கையில் சோகம்.. தனியார் பள்ளி பேருந்து மீது மோதிய லாரி.. ஓட்டுநர் கொடூர பலி.. மாணவர்கள் பலத்த காயம்!
Sivaganga Accident : சிவகங்கை மாவட்டத்தில் தனியார் பள்ளி பேருந்தும் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் பேருந்தின் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பேருந்தில் பயணித்த மாணவ, மாணவிகள் பலத்த காயமடைந்தனர். இதுகுறித்து சிவகங்கை நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், இடையமேலூர் பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த மாணவர்களை தனியார் பள்ளியின் பேருந்து அழைத்து வருவது வழக்கமாகும். அதன்படி, இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடுவதற்காக பள்ளி மாணவர்களை பேருந்தில் அழைத்து வந்து கொண்டிருந்தனர். பேருந்தானது சிவகங்கை- மேலூர் நெடுஞ்சாலையில் கோமாளிப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, சிவகங்கையில் இருந்து மேலூர் நோக்கி வேகமாக சென்ற லாரி, திடீரென எதிர்பாராத விதமாக பள்ளி பேருந்தின் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், தனியார் பள்ளி பேருந்தின் முன் பகுதி முற்றிலும் சேதமடைந்தது. மேலும், பேருந்தின் ஓட்டுநரான சிவகங்கை மாவட்டம், புல்லுக்கோட்டை பகுதியை சேர்ந்த எத்திராஜ் ( 65 வயது) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பள்ளி மாணவ, மாணவிகள் பலத்த காயம்
மேலும், பேருந்தில் பயணித்த 5 மற்றும் 6- ஆம் வகுப்புகளில் பயின்று வந்த சுமார் 9 மாணவ, மாணவிகள் மற்றும் பள்ளியில் பணிபுரியும் பெண் உதவியாளர் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதில், மாணவ, மாணவிகள் வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டனர். உடனே, அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும், அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த நிலையில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்தவர்களை மீட்டனர்.
மேலும் படிக்க: அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் வெட்டிக்கொலை.. சகோதரர் காவல் நிலையத்தில் சரண்.. புதுக்கோட்டையில் அதிர்ச்சி!




அரசு மருத்துவமனையில் மாணவர்களுக்கு சிகிச்சை
தொடர்ந்து, அவர்களை அவசர ஆம்புலன்ஸ் மூலமாக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. அத்துடன், விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த தனியார் பள்ளி பேருந்தின் ஓட்டுனர் எத்திராஜின் சடலம் பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சிவகங்கை நகர் போலீசார் விசாரணை
இந்த விபத்து குறித்து கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில், சிவகங்கை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தை ஏற்படுத்திய லாரியின் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிய நிலையில், அவரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சிவகங்கை பகுதியில் தனியார் பள்ளி பேருந்து- லாரி மோதிய விபத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மேலும் படிக்க: முன்னறிவிப்பின்றி லைனாக மூடப்படும் டாஸ்மாக் கடைகள்.. அதிரடி நடவடிக்கைக்கு தயாராகும் அரசு.. யார் யார் என லிஸ்ட் எடுக்கும் நிர்வாகம்!!