சி.வி.சண்முகம் தரப்பு மீது இபிஎஸ் டீம் மூவ்! தவெக ஆதரவு விவகாரத்தில் ஆளுநரிடம் புகார் அளிப்பு!
Edappadi Complaint CV Shanmugam: தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததாக எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையிலான 25 எம்எல்ஏக்கள் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி ஆளுநர் விஸ்வநாத் அர்லேகரிடம் எடப்பாடி கே. பழனிசாமி தரப்பினர் புகாரளித்தனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பெரிய தோல்வியை சந்தித்திருந்த நிலையில், சட்டமன்ற குழு தலைவர் பதவி தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ். பி. வேலுமணி இடையே அதிகார மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதே வேளையில், திமுக ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆக முயற்சித்ததாகவும், தமிழக வெற்றிக் கழகத்துக்கு அதிமுக ஆதரவு தெரிவிக்க வேண்டும் எனவும் எஸ். பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையிலான எம்எல்ஏக்கள் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு, எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதில், ஏற்பட்ட உள் கட்சி மோதல் காரணமாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் 22 எம்எல்ஏக்களும், எஸ். பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தலைமையிலான குழுவில் 25 எம்எல்ஏக்களும் இரு அணிகளாக பிரிந்தனர்.
தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களிப்பு
அந்த வகையில், தமிழக சட்டப்பேரவையில் தமிழக வெற்றிக் கழக அரசு பெரும்பான்மை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பில் இரு அணிகளும் தனித்தனியாக அமர்ந்திருந்த நிலையில், எஸ். பி. வேலுமணி தலைமையிலான குழு விஜய்க்கு ஆதரவாகவும், எடப்பாடி தலைமையிலான குழு எதிராகவும் வாக்குகளை அளித்தது. இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த சி.வி. சண்முகம், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசியிருந்தார். இதில், கூட்டணி விவகாரமும், தவெகவுக்கு ஆதரவு அளிப்பது உள்ளிட்டவை தொடர்பாக வெளிப்படையாக பல்வேறு கருத்துக்களை முன் வைத்திருந்தார்.
மேலும் படிக்க: “விரைவில் மகளிர் உரிமைத் தொகை”… முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!




மா.செக்கள் கூண்டோடு நீக்கம்
இதை தொடர்ந்து, மாவட்ட செயலாளர்களான நத்தம் விஸ்வநாதன், எஸ். பி. வேலுமணி, சி. வி. சண்முகம் உள்ளிட்டோரை கட்சியை பொறுப்புகளில் இருந்து அதிரடியாக நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். மேலும், மாவட்ட செயலாளர் பொறுப்பில் புதிய நபர்களை நியமித்தும் எடப்பாடி அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில், அதிமுகவை சேர்ந்த எம்எல்ஏக்கள் கட்சி விதிகளை மீறி தமிழக வெற்றி கழக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது தொடர்பாக கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஆளுநர் விஸ்வநாத் அர்லேகரிடம் புகார் மனு அளிக்கப்படும் என்றும் எடப்பாடி தரப்பை சேர்ந்த இன்பதுரை உள்ளிட்டோர் தெரிவித்திருந்தனர்.
சிவி. சண்முகம் தரப்பு மீது ஆளுநரிடம் இபிஎஸ் புகார்
அந்த வகையில், இன்று வியாழக்கிழமை ( மே 14- ஆம் தேதி) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி தரப்பை சேர்ந்த அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி, தளவாய் சுந்தரம் ஆகியோர் ஆளுநர் மாளிகையில் புகார் அளித்தனர். அந்த புகாரில் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் உத்தரவை எஸ். பி. வேலுமணி. சி.வி சண்முகம் தலைமையிலான எம்எல்ஏக்கள் மீறி உள்ளனர். தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்த எம்எல்ஏக்கள் மீது கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: “டாஸ்மாக்கில் இனி கூடுதலாக வசூலிக்க முடியாது”.. பறக்கும் படை அதிரடி சோதனையில் இறங்க உத்தரவு!