ஐபிஎல் ஸ்டேடியத்தில் போதைப்பொருளா?.. பேரவையில் உதயநிதி vs அமைச்சர் சரத் கடும் மோதல்..
Udhayanidhi vs Minister Sarath clash: சட்டப்பேரவையில் ஐபிஎல் போட்டியின் போது அமைச்சர் ஒருவர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக உதயநிதி குற்றஞ்சாட்டினார். இதற்குப் பதிலடி கொடுத்த அமைச்சர் சரத், திமுக ஆட்சியில் நடந்த ₹88 கோடி வேலைவாய்ப்பு ஊழலை சுட்டிக்காட்டியதால் பேரவையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி இடையே கடும் வாக்குவாதம் வெடித்தது.
சென்னை, ஆகஸ்ட் 17: தமிழக சட்டப்பேரவையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே காரசாரமான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், சட்டப்பேரவையில் ஐபிஎல் போட்டியின் போது அமைச்சர் ஒருவர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக மனிதவளத்துறை அமைச்சர் சரத், கடந்த கால ஆட்சியில் நடந்த ரூ.88 கோடி ஊழல் வழக்கைச் சுட்டிக்காட்டிப் பேசியதால் பேரவையில் இரு தரப்பினருக்கும் இடையே அனல்பறக்கும் வாக்குவாதம் வெடித்தது.
இதையும் படிக்க: “100 நாள் சாதனை எனப் பெருமை பேசுவது வேடிக்கை!”.. சட்டப்பேரவையில் சட்டம்-ஒழுங்கு குறித்து உதயநிதி ஸ்டாலின் கடும் விமர்சனம்!!
ஐபிஎல் மைதானத்தில் பவுடரை நுணுக்கிய அமைச்சர்:
சட்டப்பேரவையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “ஒரு அமைச்சர் ஐபிஎல் போட்டியின் போது மைதானத்தில் பவுடரை நுணுக்கிக் கொண்டிருந்ததை உலகமே பார்த்தது. ஆனால், குழந்தைக்கு மாத்திரை நுணுக்கிக் கொடுத்ததாக அவர் கதை விட்டார். இது தொடர்பாகக் காவல்துறை அவர் மீது எந்தவொரு விசாரணையோ அல்லது நடவடிக்கையோ எடுத்ததா?” என்று சரமாரியான கேள்விகளை எழுப்பினார். மேலும், ஆளுங்கட்சியைச் சேர்ந்த பலர் தொடர்ந்து போதைப்பொருள் வழக்குகளில் கைது செய்யப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதற்கு ஆளுங்கட்சித் தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. போதிய ஆதாரங்கள் இன்றி எதிர்க்கட்சித் தலைவர் அவையில் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதாக அவை முன்னவர் கேள்வி எழுப்பினார்.
ஜாபர் சாதிக் விவகாரமும் திசைதிருப்பலும்:
தொடர்ந்து நடைபெற்ற விவாதத்தில் அமைச்சர் நிர்மல் குமார், சர்வதேச போதை கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் விவகாரம் குறித்துப் பேசப்பட்டது. சபை நாகரிகம் கருதி யாருடைய பெயரையும் நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், ஜாபர் சாதிக் மீதான வழக்கானது மத்திய அரசால் டெல்லியில்தான் பதிவு செய்யப்பட்டது என்றும், அவரை காப்பாற்றவே சில முயற்சிகள் நடந்ததாகவும் எதிர்க்கட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கத் தங்கள் அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்ததாகவும் அவர்கள் வாதிட்டனர்.
அமைச்சர் சரத் கடும் பதிலடி:
உதயநிதியின் இந்த வார்த்தைகளால் கோபமடைந்த மனிதவளத்துறை அமைச்சர் சரத், இதற்குப் பதிலடி கொடுத்தார். ஐபிஎல் மைதானத்தில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவத்திற்கு ஏற்கனவே விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுவிட்டதாக அவர் தெரிவித்தார். மேலும், “அந்தச் சம்பவம் நடைபெற்ற நேரத்தில் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) ஆட்சிதான் நடைபெற்றது. அப்படியென்றால், அந்தச் சமயத்தில் ஸ்டேடியம் வாசலில் போதைப்பொருட்கள் விற்கப்பட்டதை அவர்களே தற்போது ஒப்புக்கொள்கிறார்களா?” என்று அமைச்சர் சரத் காட்டமாகக் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிக்க: “ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி!”.. 100 நாள் சாதனைத் திட்டங்களை பட்டியலிட்டு முதல்வர் விஜய் பெருமிதம்!!
ஊழலும் அவைக்குறிப்பு நீக்க கோரிக்கையும்:
தொடர்ந்து பேசிய அமைச்சர் சரத், “ஆதாரம் இல்லாமல் தேவையில்லாத குற்றச்சாட்டுகளை முன்வைக்கக் கூடாது. அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி எனது துறையில் ₹88 கோடி அளவுக்கு மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளது” என்று எதிர்க்கட்சியை நோக்கிக் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். அமைச்சர் சரத்தின் இந்தப் பேச்சால் அவையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. உடனடியாக எழுந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், அமலாக்கத்துறை (ED) வழக்குப் பதிவு செய்து தற்போது நீதிமன்றத்தின் விசாரணையில் உள்ள ஒரு விவகாரத்தை அமைச்சர் அவையில் பேசுவது சட்டப்படி முறையற்றது என்றும், அந்த வார்த்தைகளை உடனடியாக அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்றும் சபாநாயகரிடம் காரசாரமாக வலியுறுத்தினர்.