மே 14, 2026: தமிழகத்தில் தற்போது 21 வயதுக்கு கீழ் உள்ள வாடிக்கையாளர்களுக்கு கடைப்பணியாளர்கள் மதுபானங்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், 21 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்றும் டாஸ்மாக் நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது. தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதையடுத்து மதுபானக் கடைகளை முறைப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. முதலமைச்சர் விஜய் பதவியேற்பு நிகழ்ச்சியிலேயே பெண்கள் பாதுகாப்பு, போதைப்பொருள் மற்றும் மது தொடர்பான பிரச்சினைகளில் தீவிர கவனம் செலுத்தப்படும் என தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், கோவில்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகே செயல்பட்டு வந்த மதுபானக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, தமிழகம் முழுவதும் 717 மதுபானக் கடைகள் இரண்டு வாரங்களுக்குள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: “முதல்வர் விஜய் குதிரை பேரத்தில் ஈடுபடவில்லை”.. மு.க.ஸ்டாலின் சொன்னது அவரது சொந்த கருத்து.. வைகோ
21 வயதுக்கு கீழ் இருப்பவர்களுக்கு மதுபாட்டில் கிடையாது:
இதன் தொடர்ச்சியாக தற்போது டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் விற்பனை செய்யும் நடைமுறைகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும் என அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சமீப காலமாக பள்ளி மாணவர்கள் மற்றும் மாணவிகள் மது அருந்துவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இதனை கட்டுப்படுத்தவும், இதுபோன்ற நிலை தமிழகத்தில் தொடராமல் இருக்கவும் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகள், 2003-ன் விதி 11(அ) கடுமையாக அமல்படுத்தப்பட உள்ளது.
மேலும் படிக்க: இன்று தொடங்கும் ஊட்டி ரோஜா கண்காட்சி.. 4,000 ரகங்கள்.. பூத்துக்குலுங்கும் ரோஜாக்கள்..
அந்த விதிப்படி, 21 வயது பூர்த்தி அடையாதவர்களுக்கு மதுபானங்களை விற்கவோ அல்லது வழங்கவோ கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விதியை டாஸ்மாக் கடைகளில் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என தற்போது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மீறினால் நடவடிக்கை:
அனைத்து கடைப்பணியாளர்களும் இதனை முறையாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீறி 21 வயதுக்கு குறைவான வாடிக்கையாளர்களுக்கு மது பாட்டில்கள் வழங்கப்படுவது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிறார்களிடையே மதுப்பழக்கம் அதிகரித்து வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.