திருச்சியில் இன்று 10 லட்சம் பேர் பங்கேற்கும் திமுக நிர்வாகிகள் மாநாடு.. முக்கிய வாக்குறுதிகளை அறிவிக்கும் முதல்வர்..
DMK state conference in Trichy: நிர்வாகிகள் நெரிசல் இல்லாமல் மாநாட்டு திடலுக்கு வந்து செல்லும் வகையில் 9 நுழைவுவாயில்கள், 10 லட்சம் நிர்வாகிகளுக்கும் உணவு, இருக்கை வசதி, குடிநீர் வசதிகள் என பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி, மார்ச் 09: தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் திருச்சியில் இன்று (மார்ச் 09) திமுக நிர்வாகிகள் மாநாடு நடக்கிறது. தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக கூட்டணி அமைத்தும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் காண்கின்றன. தவெகவின் நிலைப்பாடு இன்னும் முடிவாகவில்லை. திமுக மற்றும் அதிமுகவில் ஏறக்குறைய கூட்டணி உறுதியாகி விட்டது. இதில் ஆளும் திமுகவை பொறுத்தவரை தேர்தல் ரேஸில் முன்னணியில் உள்ளது. கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை உறுதி செய்யும் வேலையில் அக்கட்சி தீவிரமாக உள்ளது.
இதையும் படிக்க: அதிமுக – பாஜக கூட்டணியில் இணையும் தவெக?.. திமுகவின் மெகா கூட்டணியால் மாறும் எதிர்கட்சிகளின் வியூகம்..
பிற்பகல் 3 மணிக்கும் தொடங்கும் மாநாடு:
இதற்கிடையே ‘மு.க.ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற தலைப்பில் திமுக நிர்வாகிகள் மாநில மாநாடு திருச்சி மாவட்டம் சிறுகனூரில் இன்று நடைபெறுகிறது. இந்த மாநாடு கலைநிகழ்ச்சிகளுடன் மதியம் 3 மணிக்கு ஆரம்பிக்கிறது. மாநாட்டு திடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை 5.30 மணியளவில் வருகிறார். 110 அடி உயர கம்பத்தில் திமுக கொடியை ஏற்றி வைத்து மாநாட்டை தொடங்கி வைக்கிறார்.
“ரேம்ப்” பாதையில் வருகிறார் ஸ்டாலின்:
அவர் மாநாட்டு மேடைக்கு வருவதற்காக அரை கிலோமீட்டர் தொலைவுக்கு ‘ரேம்ப்’ பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதில் அவர், திமுகவினர் வரவேற்பை ஏற்றபடி மேடைக்கு நடந்து வர உள்ளார். இந்த மாநாட்டுக்கு திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். அமைச்சர் கே.என்.நேரு வரவேற்று பேசுகிறார். அதன்பின்னர் திமுக முன்னணி நிர்வாகிகள் உரை நிகழ்த்துகின்றனர். பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட உள்ளன. இறுதியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றி பேச உள்ளார்.
முக்கிய வாக்குறுதிகளை அறிவிக்க வாய்ப்பு:
கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் சமயத்திலும், திருச்சி சிறுகனூரில்தான் திமுக மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில்தான், பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்பது உட்பட 7 முக்கிய வாக்குறுதிகளை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன்படி இன்று நடைபெறும் மாநாட்டிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு அறிவிப்புகளையும், முக்கிய வாக்குறுதிகளையும் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களிடம் கூறுகையில், புதிய அறிவிப்புகளோடு இது சிறந்த மாநாடாக அமையும். திமுக தேர்தல் அறிக்கையில் இருந்து ஒரு சில அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடலாம் என்றும் தகவல் தெரிவித்தார்.
இதையும் படிக்க: “அதிமுகவில் பழிவாங்கப்பட்டேன்”.. திமுகவில் இணைந்தது ஏன்? ஓபிஎஸ் பரபரப்பு விளக்கம்..
10 லட்சம் நிர்வாகிகள் பங்கேற்பு:
இந்த மாநாட்டில் 10 லட்சம் நிர்வாகிகள் கலந்துகொள்வார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்துள்ளார். எனவே அதற்கு ஏற்றாற்போல் சுமார் 650 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. 50 ஆயிரம் வாகனங்கள் நிறுத்தும் வகையில் விசாலமான வாகன நிறுத்தும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திமுக நிர்வாகிகள் நெரிசல் இல்லாமல் மாநாட்டு திடலுக்கு வந்து செல்லும் வகையில் 9 நுழைவுவாயில்கள், அதிநவீன எல்.இ.டி. திரைகளுடன் கூடிய பிரம்மாண்ட மேடை அமைப்பு, 110 அடி உயர கொடிக்கம்பம், 10 லட்சம் நிர்வாகிகளுக்கும் சைவ- அசைவ உணவு, இருக்கை வசதி, குடிநீர் மற்றும் சிற்றுண்டி வசதிகள் என பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.