“திமுக – காங்., கூட்டணி நீடிக்காது.. புகையத் தொடங்கிவிட்டது”.. இபிஎஸ் பரபர பேச்சு
DMK - Congress alliance will not last: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி ஆட்டம் கண்டு உள்ளது. காங்கிரசுக்கும், திமுகவுக்கும் வார்த்தை போர் நடந்து கொண்டிருக்கிறது. வருகிற சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுகவும், காங்கிரசும் கூட்டணியில் இருக்குமா? என்பது சந்தேகம் என்று பேசியுள்ளார்.
ஈரோடு, பிப்ரவரி 13: ஆட்சியில் காங்கிரஸ் பங்கு கேட்பதால் திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதன்படி 182-வது தொகுதியாக ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சத்தியமங்கலம் அரியப்பம்பாளையத்தில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது.
மேலும் படிக்க: புதிய கட்சி தொடங்கும் சசிகலா?.. பிப்.24ல் வெளியாகும் அறிவிப்பு?.. அதிர்ச்சியில் அதிமுகவினர்!!
பாஜகவின் அடிமையா அதிமுக?
இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய எடப்பாடி பழனிசாமி, பாஜகவின் அடிமை அதிமுக என்று தவறான செய்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்பி வருகிறார். ஆனால் அதிமுக சொந்த காலில் நிற்கும் கட்சி. உழைப்பாளர்கள் நிறைந்த கட்சி அதிமுக. யாருக்கும் அடிமை இல்லை. சுதந்திரமாக செயல்படும் கட்சி. திமுக தான் காங்கிரஸ் கட்சியின் அடிமையாக செயல்படுகிறது. முதலமைச்சர் பேசுவதெல்லாம் எடப்பாடி பழனிசாமி பாஜகவுக்கு அடிமை. எடப்பாடி பழனிசாமி ஊர்ந்து சென்று பதவி வாங்கினார். படுத்து சென்று பதவி வாங்கினார் என்று இதை தவிர்த்து பொம்மை முதலமைச்சருக்கு ஒன்றுமே தெரியாது. அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் மக்கள் கவனித்து கொண்டே இருக்கிறார்கள்.
திமுக – காங்., கூட்டணியில் குழப்பம்:
கருணாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலிருந்து வெளியே வராத சூழ்நிலையில் இருந்தபோதும் மு.க.ஸ்டாலினுக்கு தலைவர் பதவி கொடுக்கப்படவில்லை. அவர் திறமையற்றவர். அவரை நம்பி அவரது தந்தையே பதவியை கொடுக்கவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி வலிமையான கூட்டணி. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி ஆட்டம் கண்டு உள்ளது. காங்கிரசுக்கும், திமுகவுக்கும் வார்த்தை போர் நடந்து கொண்டிருக்கிறது. வருகிற சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுகவும், காங்கிரசும் கூட்டணியில் இருக்குமா? என்பது சந்தேகம்.
மேலும் படிக்க: தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் தேதி மாற்றம் – எப்போது தெரியுமா?
ஆட்சியில் பங்கு கேட்கும் காங்கிரஸ்:
காங்கிரஸ் ஆட்சியில் பங்கு வேண்டும், அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று தொல்லை கொடுக்க தொடங்கி விட்டது. எங்களுக்கு உரிய மரியாதை கிடைக்காவிட்டால் நாங்கள் அதற்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி. கூறியதாக பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. எனவே திமுக -காங்கிரஸ் கூட்டணி புகைய தொடங்கி விட்டது. நிலைக்கமா? நிலைக்காதா? என்று தெரியவில்லை. திருமாவளவன் ஆட்சியில் பங்கு கேட்கிறார். இதனால் அவர்களது கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் விமர்சித்துள்ளார்.