சட்டமன்றமா? பட்டிமன்றமா? திமுகவை ஆதரித்து பல மேடைகளில் பேசியவர் அமைச்சர் ராஜ்மோகன்… உதயநிதி நேரடி அட்டாக்!
Udhayanidhi And Minister Rajmohan Debate : திமுகவை பல்வேறு மேடைகளில் ஆதரித்து பேசியவர் தான் அப்போதைய பட்டிமன்ற பேச்சாளர், இப்போதைய அமைச்சர் ராஜ்மோகன் என்று எதிர்க் கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். இருவரிடையே காரசார விவாதம் நடைபெற்றது .
தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று வியாழக்கிழமை ( செப்டம்பர் 3- ஆம் தேதி) நடைபெற்றது. இதில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், தமிழக அரசின் திட்டங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கும் அரசு அனைத்து திட்டங்களுக்கும் தாய்மாமன் காது குத்தும் திட்டம் என பெயர் வைக்கலாம் என்று குற்றம் சாட்டினார். உடனே, இதற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் எழுந்து பேசையில், நீட் ஒழிப்பு ரகசியம் எனக்கு தெரியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியது தான் மிகப்பெரிய காது குத்து என்று தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக எம்எல்ஏக்கள் பேரவையில் கடும் அமலில் ஈடுபட்டனர்.
திமுகவை ஆதரித்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன்
இதைத் தொடர்ந்து பேசிய உதயநிதி ஸ்டாலின், நான் சட்டப்பேரவைக்கு சரியாக வருவதில்லை என்று அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார். எனது வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு உள்ளேன். சந்தேகம் இருந்தால் அதனை எடுத்து பாருங்கள். அமைச்சர் ராஜ் மோகனின் வரலாறு எங்களுக்கு தெரியும். பட்டிமன்ற பேச்சாளராக இருந்த ராஜ்மோகன் அமைச்சர் ஆவதற்கு முன்பு திமுகவை ஆதரித்து பல்வேறு மேடைகளில் பேசி உள்ளார். தற்போது, தமிழக வெற்றி கழகத்தில் இருப்பதால் மாற்றி பேசி வருகிறார் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: “116 நாளில் ரிவர்ஸ் கியரில் தமிழ்நாடு”.. கர்ஜித்து கேள்வி கேட்ட உதயநிதி.. கொந்தளித்த அமைச்சர் ஆனந்த்!!




திமுக ஆட்சியில் குற்றங்களே நடைபெறாதது போல
இதற்கு அமைச்சர் ராஜ்மோகன் திமுக உறுப்பினர் ஜாபர் சாதிக் பல கோடி போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் முதல் தகவல் அறிக்கை ஆன்லைனில் பதிவேற்றப்பட்டு அடையாளம் வெளிப்படுத்தியது திமுக அரசு. புகார் தெரிவித்த சுமார் அரை மணி நேரத்தில் கல்லூரி மாணவியின் பெயர் மற்றும் வீட்டு முகவரி ஆகியவற்றை வெளியிட்டு திமுக அரசு புகார்தாரரை அச்சுறுத்தி உள்ளது. திமுக ஆட்சியில் குற்றங்களே நடைபெறாதது போல நாடகம் ஆடியுள்ளனர்.
முதல்வர் மூலம் தரமாக பதிலடி தரப்படும்
தமிழக வெற்றி கழக ஆட்சியில் குற்றங்களை தடுப்பதற்காக வரலாற்றில் முதல் முறையாக சிங்கப் பெண்கள் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் தரமான பதிலடி முதல்வர் மூலமாக தரப்படும். மெரினாவுக்கு பூட்டு போடுவது எப்படி என்பதை கடந்த திமுக அரசு சொல்லிக் கொடுத்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளாக மெரினாவுக்கு பூட்டு போடுவதில் பிஎச்டி பட்டம் பெற்றவர்கள் தான் திமுகவினர். திமுக ஆட்சியில் எந்த போராட்டத்திற்கு மெரினா கடற்கரையில் அனுமதி அளிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: “யாரும் ஓடிப் போகக் கூடாது.. திங்கட்கிழமை பதில் சொல்றேன்!”.. உதயநிதிக்கு சவால் விடுத்த முதல்வர் விஜய்!!