பட்டா பெயர் மாற்றத்துக்கு லஞ்சம்.. விஏஓவை லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்க வைத்த விவசாயி.. திருப்பூரில் சம்பவம்!
Tiruppur VAO Arrested For Accepting Bribe : திருப்பூர் மாவட்டத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்து தருவதற்கு ரூ. 40 ஆயிரம் லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அதிகாரியை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம், பொங்கநல்லூர் அருகே உள்ள மாதப்பூர் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமசாமி (78 வயது). விவசாயியான இவருக்கு வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம், வீரசோழபுரம் கிராமத்தில் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தை சப் டிவிஷன் செய்து பட்டாவில் பெயர் மாற்றம் செய்து தரக்கோரி ஆன்லைன் வழியாக ராமசாமி விண்ணப்பித்திருந்தார். இது தொடர்பாக, அவர் வீரசோழபுரத்தில் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வரும் திருப்பூர் மாவட்டம், முத்தூரை அடுத்த பழையக்கோட்டையை சேர்ந்த அருண்குமாரை ( 36 வயது) நேரில் சந்தித்து தனது பட்டா பெயர் மாற்ற விண்ணப்பம் குறித்து கேட்டுள்ளார். இதற்கு, விவசாய நிலத்தை உள்பிரிவு செய்து பட்டா மாற்றம் செய்து தருவதற்கு ரூ. 40 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று கூறியுள்ளார்.
திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீசிடம் விவசாயி புகார்
இதனால், மேற்கொண்டு லஞ்சம் கொடுக்க விரும்பாத விவசாயி இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் ரசாயன பொடி தடவப்பட்ட ரூ. 20 ஆயிரம் ரொக்கத்தை விஏஓ அருண் குமாரிடம் கொடுக்குமாறு ராமசாமியிடம் போலீசார் அறிவுறுத்தினர். அதன்படி, வீரசோழபுரம் கிராம நிர்வாக அலுவலகத்தில் அருண்குமாரிடம் லஞ்ச பணத்தை கொடுத்தார்.
மேலும் படிக்க: பெரம்பலூர் அரசுப் பள்ளியில் அதிர்ச்சி சம்பவம்.. ஆசிரியரை மிரட்டி முட்டிக்கால் போட வைத்தார்களா? கல்வித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை!
விஏஓ அதிரடி கைது- சிறையில் அடைப்பு
அப்போது, அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி ரவிச்சந்திரன், ஆய்வாளர் கீதா லட்சுமி தலைமையிலான போலீசார் விஏஓ அருண்குமாரை சுற்றி வளைத்து கைது செய்தனர். தொடர்ந்து, அவரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். பின்னர், அவர் கோவை சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக விஏஓ அருண்குமார் ரூ. 40 ஆயிரம் லஞ்சம் கேட்தால் அதிர்ச்சி அடைந்த விவசாயி ராமசாமி தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறியுள்ளார். ஆனால், அதனை ஏற்றுக் கொள்ளாத கிராம நிர்வாக அதிகாரி அருண்குமார் கட்டாயம் பணம் தர வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உள்ளார்.
லஞ்சம் கொடுக்க விரும்பாக விவசாயி
இதனால், செய்வதறியாது திகைத்த விவசாயி ராமசாமி அவர் கூறியது போல கடந்த மாதம் ஆகஸ்ட் 26- ஆம் தேதி ரூ. 10 ஆயிரத்தை விஏஓ அருண்குமாரிடம், விவசாயி ராமசாமி கொடுத்துள்ளார். மேலும், நீதித் தொகை ரூ. 30 ஆயிரத்தை இரு தவணைகளாக தருவதாகவும் கூறியுள்ளார். ஆனால், இவ்வளவு தொகை கொடுத்து பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு ராமசாமி விரும்பவில்லை. அதன் அடிப்படையிலேயே லஞ்ச ஒழிப்பு துறையில் அளிக்கப்பட்ட புகாரில் விஏஓ கைது செய்யப்பட்டார்.
மேலும் படிக்க: தமிழகத்தில் கருத்தரித்தல் மையங்களில் ஐடி ரெய்டு.. என்ன காரணம்.. பெரும் பரபரப்பு!