தமிழகத்தில் கருத்தரித்தல் மையங்களில் ஐடி ரெய்டு.. என்ன காரணம்.. பெரும் பரபரப்பு!
Income Tax Raids At Fertility Centers : தமிழகத்தில் செயல்பட்டு வரும் தனியார் கருத்தரித்தல் மையங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்தப் பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. போலீசாரும் குவிக்கப்பட்டு உள்ளனர் .
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கருத்தரித்தல் சிகிச்சை மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், பிரபல தனியார் நிறுவனங்கள் மற்றும் சாதாரண நிறுவனங்கள் சார்பில் கருத்தரித்தல் சிகிச்சை மையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில், சுமார் 20- க்கும் மேற்பட்ட கருத்தரித்தல் சிகிச்சை மையங்களில் வரி ஏய்ப்பு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. அந்த புகாரின் அடிப்படையில், வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று புதன்கிழமை ( செப்டம்பர் 2- ஆம் தேதி) தமிழகத்தில் செயல்பட்டு வரும் சென்னை, அடையாறு, வேளச்சேரி, மதுரவாயல், பெரம்பூர் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் கருத்தரித்தல் சிகிச்சை மையங்களிலும், மதுரை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் பிரபல கருத்தரித்தல் மையங்களிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
20- க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை சோதனை
அவர்கள் கார்களில் அதிரடியாக சம்பந்தப்பட்ட கருத்தரித்தல் மையங்களுக்கு சென்ற நிலையில், மையத்தின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் ஆகியவற்றை அடைத்துவிட்டு, அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில், வரி ஏய்ப்பு செய்ததற்கான ஏதேனும் ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் உள்ளனவா என்பது குறித்தும் கருத்தரித்தல் சிகிச்சை அளித்ததற்கான ஆவணங்கள் மற்றும் வருமானம் உள்ளிட்டவை குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டனர். மேலும், கருத்தரித்தல் சிகிச்சை மையத்தில் உள்ள கணினியில் டிஜிட்டல் ஆவணங்கள் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.
மேலும் படிக்க: புதுக்கோட்டையில் பேரதிர்ச்சி.. அரசுப் பேருந்தில் ஏற்ற மறுத்து தள்ளிவிடப்பட்ட மாணவிகள்!
பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றல்
சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற இந்த அதிரடி சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இருந்தாலும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை. வருமானவரித்துறை சோதனைகள் முடிந்ததை தொடர்ந்து, வருமான வரித்துறையின் உயர் அதிகாரிகள் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படும் என அந்த துறையின் வட்டாரத்தில் கூறப்படுகிறது. தமிழக முழுவதும் சுமார் 20- க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற இந்த சோதனையால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் தொடர் வருமான வரித்துறை சோதனை
முன்னதாக, சம்பந்தப்பட்ட பகுதிகளில் அந்தந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் இருந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த சோதனையின் போது, கருத்தரித்தல் மையத்தில் இருந்து யாரும் வெளியேறவோ அல்லது வெளியில் இருந்து யாரும் உள்ளே செல்லவோ அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, தமிழகத்தில் சென்னை பெருங்குடி மற்றும் ஓஎம்ஆர் பகுதிகளில் செயல்பட்டு வரும் சில தனியார் மென்பொருள் நிறுவனங்களில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டிருந்தனர். இதை தொடர்ந்து, தற்போது கருத்தரித்தல் சிகிச்சை மையங்களில் இந்த சோதனை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: சென்னை டூ கன்னியாகுமரி வரை… முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த முத்தான திட்டங்கள்.. என்னென்ன தெரியுமா!