“2029ல் பிரதமர் வேட்பாளர் யார்?”.. காங்கிரஸ் MLA தாரகை கத்பர்ட் vs தவெக MLA கனிமொழி மோதல்!!
Next Prime Minister Face: 2029-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ தாரகை கத்பர்ட் மற்றும் தவெக எம்.எல்.ஏ கனிமொழி ஆகியோருக்கு இடையே சட்டப்பேரவை வளாகத்தில் விவாதம் வெடித்துள்ளது. ராகுல் காந்தியா அல்லது முதலமைச்சர் விஜய்யா என்ற இருவரின் கருத்து பரிமாற்றங்கள் தமிழக அரசியலில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சென்னை, செப்.02: தமிழக அரசியல் களத்தில் 2029-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளர் குறித்து இப்பொழுதே விவாதங்கள் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகிய இருவருக்கும் இடையே 2029 பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து சுவாரஸ்யமான மற்றும் காரசாரமான கருத்துப் பரிமாற்றங்கள் அரங்கேறின. ராகுல் காந்தியே அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரதமர் வேட்பாளர் என காங்கிரஸ் தரப்பு வலியுறுத்த, 2029-ல் தளபதி விஜய்தான் பிரதமர் வேட்பாளர் எனத் தவெக தரப்பு உறுதியளித்துப் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
இதையும் படிக்க: அதிமுக எம்எல்ஏ-க்கள் ராஜினாமா வழக்கு.. உயர்நீதிமன்றம் வைத்த செக்.. அலறவிட்ட இபிஎஸ்!!
ராகுல் காந்தியே பிரதமர் வேட்பாளர்:
இதுகுறித்து இன்று காலை சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ தாரகை கத்பர்ட், “அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே தலைவர் ராகுல் காந்திதான் என்பது இந்த உலகத்திற்கே தெரிந்த விஷயம். முதலமைச்சர் விஜய் கூட ராகுல் காந்தியைத்தான் பிரதமர் வேட்பாளராகத் தெளிவாக்கிக் கொண்டு வருகிறார். புதிய எம்.எல்.ஏ-க்கள் இன்னும் ரசிகர் மனப்பான்மையுடன் பேசி வருகிறார்கள். அவர்கள் தங்கள் தலைவரைப் பெருமையாகச் சொல்வதில் தவறு ஏதும் இல்லை. எனவே, எந்தவித யூகங்களுக்கும் இடம் கொடுக்கத் தேவையில்லை; 2029-ல் ராகுல் காந்தியே பிரதமர் வேட்பாளராக களமிறங்குவார்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
2029-ல் விஜய்தான் பிரதமர் வேட்பாளர்:
தொடர்ந்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ தாரகை கத்பர்ட்டின் கூற்றுக்குப் பதிலடி கொடுத்துப் பேசிய தவெக எம்.எல்.ஏ கனிமொழி, “2029 நாடாளுமன்றத் தேர்தலில் தலைவர் தளபதி விஜய்தான் பிரதமர் வேட்பாளர் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அடுத்த தேர்தலில் பிரதமர் யார் என்பதை டெல்லி முடிவு செய்யப்போவது இல்லை; தமிழ்நாட்டிலிருந்துதான் அது முடிவு செய்யப்படப் போகிறது. இந்திய அரசியலில் 2029-ல் மிகப் பெரிய மாற்றத்தை அனைவரும் காண்பார்கள். ராகுல் காந்தியே தளபதியின் கரங்களைப் பிடித்து முதல்வர் இருக்கையில் அமர வைத்தது போல, 2029-ல் பிரதமர் ஆசனத்தில் அமரவைக்கும் சூழல் உருவாகும்” என அதிரடியாகப் பேசினார்.
இதையும் படிக்க: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. கோவையில் கணக்கெடுப்பில் இறங்கிய அதிகாரிகள்.. விரைவில் தங்க மழை!
அரசியல் களத்தில் எழுந்த புதிய விவாதம்
தேசிய அளவிலான கூட்டணியும், தமிழகத்தின் முன்னணி அரசியல் தலைவர்களின் நிலப்பாடுகளும் 2029 தேர்தலில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு இப்போதே எழுந்துள்ளது. ஏற்கெனவே, ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்கவில்லை என்றால், அமைச்சரவையில் இருந்து விலகுவோம் என காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ் எச்சரித்த நிலையில், புதுமுக எம்.எல்.ஏ-க்களின் இந்த நேருக்கு நேர் கருத்து மோதல், தமிழக அரசியல் களத்தில் ராகுல் காந்தி மற்றும் தவெக தலைவர் விஜய் இடையேயான எதிர்கால அரசியல் அணுகுமுறைகள் குறித்தான புதிய விவாதத்தைத் தூண்டியுள்ளது.