புதுக்கோட்டையில் பேருந்திலிருந்து மாணவிகள் தள்ளிவிடப்பட்ட சம்பவம்.. ஓட்டுநர்- நடத்துனர் சஸ்பெண்ட்!
Pudukottai Govt Bus Driver- Conductor Suspend : புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுப் பேருந்தில் இருந்து பழங்குடியின பள்ளி மாணவிகள் கீழே தள்ளி விடப்பட்ட சம்பவத்தில் அந்தப் பேருந்தின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
புதுக்கோட்டை மாவட்டத்தில், ரங்கம்மாள் சமுத்திரம் அருகே உள்ள கீரனூர் பகுதியில் இருந்து சுமார் 10 பழங்குடியின பள்ளி மாணவிகள் பள்ளி செல்வதற்காக அந்த வழியாக புதுக்கோட்டை சென்ற அரசு பேருந்தில் ஏறினர். அப்போது, பேருந்தில் கூட்டம் அதிகமாக இருப்பதாக கூறிய நடத்துனர், அந்த மாணவிகளை கீழே இறங்குமாறு கூறி தள்ளி விட்டதாக கூறப்படுகிறது. இதில், சிறிது வேகத்தில் இயக்கப்பட்ட பேருந்தில் இருந்து 8 பழங்குடியின மாணவிகள் கீழே விழுந்ததில் தலை, கை, கால்கள் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், அந்த பேருந்தின் ஓட்டுனர் அர்ஜுனன் மற்றும் நடத்துனர் மணிகண்டன் ஆகியோரை போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்தனர்.
புதுக்கோட்டை – திருச்சி சாலையில் மறியல் போராட்டம்
கீரனூர் பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மாணவிகள் புதுக்கோட்டை அரசு பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். அவர்கள், வழக்கம் போல இன்று அரசு பேருந்தில் ஏறிய நிலையில், கூட்டம் அதிகமாக இருப்பதாக கூறி அவர்களை நடத்துனர் கீழே தள்ளிவிட்டதாகவும், கதவை திறந்த போது மாணவிகள் ஒருவர் பின் ஒருவராக கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தை கண்டித்து மாணவிகளின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் புதுக்கோட்டை- திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதில், சம்பந்தப்பட்ட அரசு பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.
மேலும் படிக்க: பெரம்பலூர் அரசுப் பள்ளியில் அதிர்ச்சி சம்பவம்.. ஆசிரியரை மிரட்டி முட்டிக்கால் போட வைத்தார்களா? கல்வித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை!




அரசுப் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் மீது நடவடிக்கை
இதனிடையே, இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை மண்டல போக்குவரத்து மேலாளர் உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார். அதன் அடிப்படையில், இன்று காலை நடைபெற்ற இந்த சம்பவத்தை தொடர்ந்து, பிற்பகலில் அரசு பேருந்தின் ஓட்டுனர் அர்ஜுனன் மற்றும் நடத்துனர் மணிகண்டனை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
பழங்குடியின சமுதாயத்தில் முதல் தலைமுறையினர்
முன்னதாக அரசுப் பேருந்தில் இருந்து பழங்குடியின மாணவிகள் கீழே தள்ளிவிடப்பட்டு காயமடைந்த நிலையில், அவர்கள் அவசர ஆம்புலன்ஸ் மூலமாக மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. கீரனூர் பகுதியை சேர்ந்த பழங்குடியின சமுதாயத்தில் இருந்து தற்போது தான் இந்த மாணவிகள் முதல் தலைமுறைகளாக கல்வி பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: புதுக்கோட்டையில் பேரதிர்ச்சி.. அரசுப் பேருந்தில் ஏற்ற மறுத்து தள்ளிவிடப்பட்ட மாணவிகள்.. 8 பேர் காயம்!