புதுக்கோட்டையில் பேரதிர்ச்சி.. அரசுப் பேருந்தில் ஏற்ற மறுத்து தள்ளிவிடப்பட்ட மாணவிகள்!
Pudukkottai Tribal Students Pushed Off Bus : புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பேருந்தில் ஏறிய பழங்குடியின பள்ளி மாணவிகள் பேருந்தில் இருந்து கீழே தள்ளி விடப்பட்டனர். இதில், 8 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு பேருந்தில் பழங்குடியின பள்ளி மாணவிகளை ஏற்ற மறுப்பு தெரிவித்து அவர்களை ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பேருந்தில் இருந்து தள்ளி விடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதில், 8 மாணவிகள் படுகாயம் அடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம், ரங்கம்மாள் சத்திரம் அருகே உள்ள கீரனூர் பகுதியில் பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்த சுமார் 8 மாணவிகள் அந்த பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்த மாணவிகள் இன்று புதன்கிழமை ( செப்டம்பர் 2- ஆம் தேதி) அந்த வழியாக புதுக்கோட்டை சென்ற அரசு பேருந்தில் ஏற முயன்றனர். அப்போது, கூட்டம் அதிமாக இருப்பதாக கூறி பேருந்தில் இருந்து இறங்குமாறு நடத்துனர் கூறியதாக தெரிகிறது. தொடர்ந்து நடத்துனர், அந்த மாணவிகளை பேருந்தில் ஏற்ற மறுத்துடன், அவர்களை பேருந்தில் இருந்து கீழே வலுக்கட்டாயமாக தள்ளி விட்டதாக தெரிகிறது.
கீழே விழுந்த 8 மாணவிகளுக்கு கை, காலில் காயம்
இதில், கீழே விழுந்த மாணவிகளுக்கு கை மற்றும் கால்களில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அந்த மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அந்த சாலையலி் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த அந்த பகுதி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
மேலும் படிக்க: கொடுத்த நகையை திரும்பி கேட்ட பெண்ணை வெட்டிக் கொலை.. காவலர் கைது.. தூத்துக்குடியில் கொடூரம்!!




பழங்குடியின சமுதாயத்தினர் குற்றச்சாட்டு
தொடர்ந்து, காயம் அடைந்த 8 பள்ளி மாணவிகளையும் மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இந்த சம்பவம் தொடர்பாக பழங்குடியின சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கூறுகையில், எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் யாரும் படித்தது கிடையாது. தற்போதைய தலைமுறையில் உள்ள சிறுவர், சிறுமிகள் அரசு பள்ளிகளுக்கு சென்று படித்து வருகின்றனர்.
அரசு ஊழியர்கள் செயலால் கடும் அதிர்ச்சி
அண்மையில் கூட ஒரு மாணவி செவிலியர் படிப்பு முடித்த நிலையில், அவரை பாராட்டுவதற்காக நிகழ்ச்சிகள் வைத்து கொண்டாடினோம். இப்படி இருக்கும் நிலையில், எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தற்போது படித்து முன்னேறி வரும் நிலையில், அவர்களுக்கு கை கொடுத்து தூக்கி விட வேண்டிய அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக குற்றம் சாட்டினர்.
மேலும் படிக்க: பெரம்பலூர் அரசுப் பள்ளியில் அதிர்ச்சி சம்பவம்.. ஆசிரியரை மிரட்டி முட்டிக்கால் போட வைத்தார்களா? கல்வித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை!