முதல்வர் விஜய் பெயரில் லட்சக்கணக்கில் நூதன மோசடி. காவல் நிலையத்தில் குவியும் புகார்கள்.. வெளிவந்த திடுக்கிடும் உண்மை!
Online Financial Fraud Name Of CM Vijay : மத்திய பிரதேச மாநிலத்தில் சில இடங்களில் தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் பெயரை பயன்படுத்தி மர்ம கும்பல் ஆன்லைன் வாயிலாக பண மோசடியில் ஈடுபட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
மத்திய பிரதேசத்தில் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பெயரை பயன்படுத்தி நூதன மோசடி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. முதல்வர் விஜய்க்கு சொந்தமாக அறக்கட்டளை செயல்பட்டு வருவதாகவும், அதில், உள்ள நிர்வாகிகள் எனவும் கூறி ஆன்லைன் வாயிலாக அந்த மர்ம கும்பல் பொதுமக்களை தொடர்பு கொண்டுள்ளது. அவ்வாறு தொடர்பு கொள்ளும் அந்த கும்பல், பொதுமக்களிடம் நிதி உதவி வழங்குவதாகவும், சிறு தொழில்கள் தொடங்குவதற்கு கடன் வழங்குவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளது. இதனை நம்பிய மத்திய பிரதேச மக்கள் சம்மதம் தெரிவித்துள்ளனர். அதன்படி, இந்த உதவிகளை பெறுவதற்காக பதிவு கட்டணம் மற்றும் சரிபார்ப்பு கட்டணம், செயலாக கட்டணம் செலுத்த வேண்டும் என்று அந்த மர்ம கும்பல் தெரிவித்துள்ளது. இதனை நம்பிய மக்களிடம் ஒவ்வொருவரிடம் இருந்து சுமார் ரூ.1,000 முதல் ரூ. 50 ஆயிரம் வரை வசூல் செய்துள்ளது.
ஆன்லைன் வாயிலாக பண மோசடி- 6 புகார்கள் பதிவு
ஆனால், அந்த கும்பல் கூறியபடி நிதி உதவியும், சிறு தொழில்கள் தொடங்குவதற்கான கடனும் வழங்காமல் இருந்துள்ளது. இது குறித்து, பொதுமக்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அந்த கும்பல் சரியான பதில் அளிக்காமல் தலைமறைவானதாக தெரிகிறது. இதன் பின்னரே தாங்கள் ஏமாற்றப்பட்டதை மத்திய பிரதேச மக்கள் உணர்ந்தனர். பின்னர், இது தொடர்பாக இந்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க தொடங்கினர். அதன்படி, கடந்த மாதம் மட்டும் சுமார் 6 புகார்கள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றத் தடுப்புப் பிரிவு காவல் கூடுதல் துணை ஆணையர் ராஜேஷ் தன்டோடியா தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்.. எந்தெந்த மாவட்டத்திற்கு நியமனம்!




பொது மக்களுக்கு மிகுந்த எச்சரிக்கை தேவை
மேலும், இது போன்ற மோசடி சம்பவங்கள் அதிகளவு நிகழ்ந்து வருவதாகவும், இதில், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும், மேற்கண்ட சம்பவம் தொடர்பாக தொடர் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கமிஷனர் ராஜேஷ் தன்டோடியா தெரிவித்துள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகளவு நிகழ்ந்து வருகின்றன. இதில், பிரபல நபர்களின் பெயர் மற்றும் புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை சாதாரணமாக பயன்படுத்தி மோசடி செய்வது அதிகரித்துள்ளது.
பிரபலமானவர்கள் பெயரை பயன்படுத்தி மோசடி
அந்த வகையில், முதல்வர்கள், அமைச்சர்கள், எம்பிக்கள் மற்றும் காவல்துறையில் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் மற்றும் பெயர்கள் ஆகியவற்றை சர்வ சாதாரணமாக மர்ம கும்பல் பயன்படுத்தி மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறது. பெரும்பாலும், இந்த கும்பல் ஆன்லைன் வழியாகவும், சமூக வலைதளங்களை வழியாகவும் இது போன்ற மோசடிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதில், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மதுரையில் எஃப்கியூஎல் முதலீட்டு மோசடி.. பாதிக்கப்பட்ட இளைஞர் விபரீத முடிவு.. சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!