AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
சேலம் ராஜகணபதி கோவிலில் 12 ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேகம்.. புனித நீர் ஊற்றிய போது வட்டமிட்ட கருடன்!

சேலம் ராஜகணபதி கோவிலில் 12 ஆண்டுகளுக்குப் பின் கும்பாபிஷேகம்.. புனித நீர் ஊற்றிய போது வட்டமிட்ட கருடன்!

Sathis S
Sathis S | Published: 30 Aug 2026 14:24 PM IST

Salem Rajaganapathi Temple Kumbhabhishekam: சேலம் கடைவீதியில் அமைந்துள்ள 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ராஜகணபதி திருக்கோவில் கும்பாபிஷேக விழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் வெகுவிமரிசையாக நடைபெற்றது. 12 ஆண்டுகளுக்குப் பின் நடைபெற்ற இந்த விழாவில், விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்ட போது கருடன் வட்டமிட்டது பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியது.

சேலம் மாநகரத்தின் மையப் பகுதியான கடைவீதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ராஜகணபதி திருக்கோவில், சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆன்மீகச் சிறப்புமிக்கத் தலமாகும். சேலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்ட மக்களிடையே மாபெரும் வழிபாட்டுத் தலமாகத் திகழும் இக்கோவிலில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் புனிதக் கும்பாபிஷேகப் பெருவிழா மிகவும் பிரம்மாண்டமான முறையில் திட்டமிடப்பட்டது. இதற்காகக் கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி பாலாலயம் செய்யப்பட்டு, கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் மிக தீவிரமாகத் தொடங்கப்பட்டன. இத்திருப்பணியின் முக்கிய நிகழ்வாகக் கடந்த ஜூன் 16-ஆம் தேதி, இக்கோவிலின் வரலாற்று முதன்முறையாக 15 அடி உயரத்தில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து கும்பாபிஷேக விழா முறைப்படி தொடங்கப்பட்டுத் தொடர் சிறப்புப் பூஜைகள் விமரிசையாக நடைபெற்று வந்தன.

யாகசாலை பூஜைகளும் கும்பாபிஷேக நிகழ்வும்:

கடந்த ஜூன் 28-ஆம் தேதி முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு, நேற்று இரவு வரை மூன்று கால ஹோமங்கள் முறைப்படி நடைபெற்றன. விழாவின் சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேக நாளான இன்று அதிகாலை 4 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டுத் திருமுறை பாராயணம், பாவனாபிஷேகம், வெள்ளை சாத்துப்படி மற்றும் நான்காம் கால யாக பூஜைகளுடன் மகா பூர்ணாஹூதி சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து காலை 7:15 மணிக்கு, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க, தீர்த்த கலசங்களுக்குச் சிறப்பு பூஜைகள் செய்தனர். தலைமை குருக்கள் புனித தீர்த்தக் கலசத்தைத் தலையில் சுமந்து யாகசாலையிலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு ராஜகணபதி கோவிலை வந்தடைந்தார்.

Follow Us