கோவையில் மூட்டை மூட்டையாகக் கடத்தப்படும் ரேஷன் அரிசி.. வைரலாகும் வீடியோ!
Ration Rice Smuggling: கோவை ஆவாரம்பாளையம் ரேஷன் கடையில் இருந்து மூட்டை மூட்டையாக அரிசி கள்ளச்சந்தைக்குக் கடத்தப்படும் அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏழை மக்கள் அரிசி கேட்கும்போது இல்லை எனக்கூறும் ஊழியர்கள், கடத்தலில் ஈடுபடுவதைக் கண்டு பொதுமக்கள் கொந்தளித்துள்ளனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை வலுத்துள்ளது.
கோவை, ஆகஸ்ட் 30: தமிழ்நாட்டில் ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பங்களின் அன்றாட உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதில் அரசின் ரேஷன் கடைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இலவசமாகவும் குறைந்த விலையிலும் அரசு வழங்கும் அத்தியாவசியப் பொருட்கள் உரிய முறையில் ஏழை எளிய மக்களுக்குச் சென்று சேருவதை உறுதிசெய்யப் பல்வேறு கட்டுப்பாடுகளும் கண்காணிப்புகளும் நடைமுறையில் உள்ளன. எனினும், சில கறுப்பு ஆடுகளால் ரேஷன் பொருட்கள் முறைகேடாகக் கடத்தப்பட்டு, கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படும் சம்பவங்கள் ஆங்காங்கே தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த நிலையில், கோவையில் பகல் நேரத்திலேயே ரேஷன் கடையில் இருந்து அரிசி மூட்டைகள் சட்டவிரோதமாக வாகனங்களில் ஏற்றி கடத்தப்படும் வீடியோ வெளிவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அம்பலமான கள்ளச்சந்தை கடத்தல் சம்பவம்
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ஆவாரம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நியாய விலைக் கடையில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இங்குள்ள கடையில் இருந்து ஏழை எளிய மக்களுக்காக ஒதுக்கப்பட்ட அரிசி மூட்டைகள் சட்ட விரோதமான முறையில் வாகனங்களில் ஏற்றப்பட்டு வேறு இடங்களுக்குக் கடத்தப்பட்டு வந்துள்ளன. இதனை அந்தப் பகுதியைச் சேர்ந்த விழிப்புணர்வு கொண்ட நபர் ஒருவர் தனது செல்போனில் துல்லியமாக வீடியோவாகப் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் விவாதத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தி வருகின்றன.
