மதுரையில் எஃப்கியூஎல் முதலீட்டு மோசடி.. பாதிக்கப்பட்ட இளைஞர் விபரீத முடிவு.. சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!
Madurai FQL Financial Scam : மதுரை மாவட்டத்தில் எஃப்கியூஎல் நிதி மோசடியில் பாதிகப்பட்ட இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சடலத்தை சாலையில் வைத்து நீதி கேட்டு உறவினர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் மேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் எஃப். யூ. எல். நிறுவனம் என்ற பெயரில் செல்போன் செயலிகள் வாயிலாக பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறியுள்ளனர். எஃப்.கியூ.எல். நிறுவனத்தின் செயலி மூலம் முதலீடு செய்தால் அமெரிக்க டாலர் மதிப்பில் அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளனர். இதன் மூலம் ஒருவரை இணைத்தால் அவர் மற்றொருவரை இணைத்து சங்கிலி தொடராக இந்த முதலீடும், மோசடி சம்பவமும் நடந்துள்ளது. இதில், கோடிக்கணக்கில் மோசடி நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக ஏஜெண்டுகள் செயல்பட்டதாக தெரிகிறது. இதனை நம்பிய ஏராளமான பொதுமக்கள் கடன் வாங்கி அந்த நிறுவனத்தின் செயலி மூலமாக முதலீடு செய்துள்ளனர். ஆனால், அந்த நிறுவனம் கூறியவாறு முதலீட்டு பணத்தை இரட்டிப்பு செய்து வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
பணத்தை இழந்த இளைஞர் தற்கொலை
இதனால், பாதிப்புக்கு உள்ளான ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மேலூர் மற்றும் சிவகங்கையில் போலீசாரிடம் புகார் அளிக்க தொடங்கினர். இந்த நிலையில், பணத்தை இரட்டிப்பு ஆக்குவதாக நடந்த ஆன்லைன் மோசடியில் பாதிப்புக்கு உள்ளான நத்தம் பகுதியை சேர்ந்த ராசு ( 26 வயது) என்ற இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை அறிந்த அவரது உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் ராசுவின் சடலத்தை திண்டுக்கல்- மதுரை சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டவர். அப்போது, இவரது மரணத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
மேலும் படிக்க: கார் கதவுகளில் ரகசிய அறைகள்.. கோவையில் சிக்கிய ரூ. 10 கோடி போதைப்பொருள்.. 3 பேர் அதிரடி கைது




போராட்டக்காரர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை
இந்த திடீர் போராட்டம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த போராட்டத்தை உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தால் திண்டுக்கல்- மதுரை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை
இதனிடையே, இந்த நிதி மோசடி தொடர்பாக எஃப்.கியூ. எல். முதலீட்டு நிறுவனம் மீது ஏராளமானோர் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கானது தற்போது பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், தற்போது வரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: நள்ளிரவில் பகீர் சம்பவம்.. நாமக்கல்லில் கணவன்-மனைவியை கட்டிப்போட்டு 40 பவுன் நகை- ரூ.40 லட்சம் கொள்ளை!